தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பெரிய விநாயகர் சிலை தயாரித்த கடையை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையனார் இழுத்து மூடினார்.
இதனைக் கண்டித்து கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் பாஜகவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், மணிகண்டன், பாஜக மாவட்டத்தலைவர் பாலசுந்தரம், தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலை மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணபதி, நகரதலைவர் சர்தார்சிங், பாஜக ஐடி செல் மாவட்டதலைவர் சிவா, பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது வட்டாட்சியர் பிரபாகரன் பேசுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரிய விநாயகர் சிலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலைகளை வீதியில் வைத்து வழிபடக்கூடாது. தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அரசின் விதிமுறைகளையும், நீதிமன்றத்தின் உத்தரவையும் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம். அரசின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர்சிலைகளை விற்பனை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, மூடியக் கடைகளை திறக்க வட்டாட்சியர் பிரபாகரன் அனுமதி வழங்கினார்.