தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமையால் மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை - கணவரிடம் போலீஸ் விசாரணை!

By

Published : Jul 1, 2023, 7:53 PM IST

தெலங்கானாவில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவரால், மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

Etv Bharat
Etv Bharat

ராஜன்னா சிர்சில்லா:தெலங்கானா மாநிலத்தில், காதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் தனது மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெமுலவாடா ருத்ரவாராம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜிதா என்ற நேஷா (30). பத்து ஆண்டுகளுக்கு இவர், கணினி பயிற்சிக்காக கரீம் நகர் பகுதிக்குச் சென்று வந்தார். அப்போது, முகமது அலி என்ற வாழைப்பழ விற்பனையாளருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாறியது.

இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவித்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், ரஜிதா வீட்டை விட்டு வந்து முகமது அலியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முகமது அயன்ஷ் (7), உஷ்மன் முகமது (14 மாதங்கள்) என்னும் இரண்டு மகன்களும், அஷ்ரஷாபின் (5) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு முகமது அலி, ரஜிதாவிடம் வரதட்சணை வாங்கி வரக்கோரி தகராறு செய்துவந்துள்ளார். இதனால், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ரஜிதா தனது கணவர் மீது வெமுலவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தான் இதுபோன்று மீண்டும் நடந்துகொள்ள மாட்டேன் என கணவர் கூறிய நிலையில் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

ஆனால், சில தினங்களுக்குப் பின்னர் முகமது அலி மீண்டும் ரஜிதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார். பின்னர், ரஜிதா மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கடந்த 27ஆம் தேதி ரஜிதா வீட்டிற்குச் சென்ற முகமது அலி, வரதட்சணைக் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளை ரஜிதாவின் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றார்.

தொடர்ந்து, ரஜிதாவின் பெற்றொர், அவரை கணவர் வீட்டிற்குச் செல்லுமாறு கூறி மறுநாள் ரஜிதா மற்றும் பிள்ளைகளை ருத்ராங்கி பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் சென்றனர். பின்னர், ரஜிதாவின் பெற்றோர் தனது மகளிடம் வரதட்சணைக் கேட்டு மருமகன் தொல்லை செய்வதாக வெமுலவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், பக்ரீத் பண்டிகை முடிந்தவுடன் இந்த பிரச்னையை முடித்து வைப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 30) கொடுருப்பாக்க தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள நடு மனையர் நீர்த்தேக்கம் பகுதியில் பெண் சடலம் ஒன்று மற்றும் குழந்தைகள் சடலங்கள் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு, கிடந்த சடலங்கள் ரஜிதா மற்றும் அவரது பிள்ளைகள் என உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவரது கை பையில் இருந்த தகவலை வைத்து ரஜிதாவின் கணவருக்கும், சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சடலங்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக சிர்சில்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரஜிதாவின் சகோதரர் ரஞ்சித் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவரால் ஏற்பட்ட வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் ஆய்வாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details