தமிழ்நாடு

tamil nadu

குனோ பூங்காவில் மூன்று மாதத்தில் 4வது சிவிங்கிப்புலி குட்டி உயிரிழப்பு

By

Published : May 24, 2023, 7:54 AM IST

Two

மத்தியபிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி ஈன்ற சிவிங்கிப் புலி குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது.

மொரேனா (மத்தியபிரதேசம்):இந்தியாவில் அழிந்துபோன விலங்கினமான சிவிங்கிப் புலிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. பிரதமர் மோடி தனது 72வது பிறந்தநாளையொட்டி, கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்த சிவிங்கிப் புலிகளை குனோ பூங்காவில் திறந்து விட்டார். இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த புலிகளை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாஷா என்ற பெண் சிவிங்கி புலி, கடந்த மார்ச் மாதம் சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. அதேபோல், தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தது. சிவிங்கிப்புலி ஷாஷா இறந்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு சிவிங்கிப் புலியான உதய் உயிரிழந்தது.

இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட தக்‌ஷா என்ற சிவிங்கிப் புலி உயிரிழந்தது. இனப்பெருக்கத்திற்காக ஆண் சிவிங்கிப் புலிகள் இருந்த இடத்தில் பெண் சிவிங்கிப்புலி தக்‌ஷாவை திறந்து விட்டியிருந்த நிலையில், ஆண் சிவிங்கி புலி தக்‌ஷாவை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவிலிருந்து தக்‌ஷா காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், அதன் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து மருந்துகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தக்‌ஷா உயிரிழந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலி குட்டி ஒன்று உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பூங்காவில் உள்ள சிவிங்கி புலிக்குட்டிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துவிட்டது என்றும், புலிக்குட்டியின் இறப்புக்கான காரணத்தை கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குனோ தேசிய பூங்காவில், நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜுவாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, கடந்த மார்ச் 29ஆம் தேதி நான்கு குட்டிகளை ஈன்றது. அந்த நான்கு குட்டிகளில் ஒன்றுதான் இப்போது இறந்துள்ளது. பிறந்த இரண்டே மாதங்களில் புலிக்குட்டி இறந்துள்ளது. கடந்த சில மாதங்களில் குனோ தேசிய பூங்காவில் மொத்தம் நான்கு சிவிங்கிப் புலிகள் இறந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி, 4 குட்டிகளை ஈன்றது!

ABOUT THE AUTHOR

...view details