தமிழ்நாடு

tamil nadu

பெங்களூரில் அரங்கேறிய மதுரை கேங் வார்.. முன்விரோதம் காரணமா.. போலீஸ் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 11:07 PM IST

Updated : Sep 5, 2023, 8:00 AM IST

Tamil Nadu based person attacked in Bengaluru: பெங்களூரு கம்மனஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை, 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு (கர்நாடகா):பானசவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்மனஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் இன்று (செப்.4) மாலை 5 மணியளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, தமிழ்நாடு எண் பொருத்தப்பட்டிருந்த வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவரை சரமாரியாக தாக்கியது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அந்நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அவர் தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் கீரைத்துறையைச் சேர்ந்த திமுக பிரமுகர் வி.கே. குருசாமி (55) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தொழில் நிமித்தமாக விமானம் மூலம் பெங்களூரு வந்திருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காயமடைந்த குருசாமியின் மீது மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசியலில் இருக்கும் குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்திருக்கிறார்.

2002ஆம் ஆண்டு குருசாமிக்கும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர், மறைந்த ராஜபாண்டி கும்பலுக்கு இடையே தகராறு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சின்னுச்சாமி என்பரது கொலை வழக்கில் குருசாமி ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு குருசாமி பெங்களூர் வந்திருப்பது அந்த கும்பலுக்கு தெரியவந்திருக்கலாம், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு டிசிபி பீமாசங்கர் குலேத் கூறுகையில், “தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே. குருசாமி என்பவர் ஹோட்டலில் தேநீர் அருந்தும்போது அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் காயமடைந்த குருசாமி என்பவர் மீது மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக ஒரு ஏஜெண்டுடன் குருசாமி இருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் அந்த ஏஜெண்ட்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க:ஏடிஎம் மையத்தில் கீழே கிடந்த ரூ.25 ஆயிரம்.. செல்போனை பறித்த இளைஞர் கைது.. உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!

Last Updated : Sep 5, 2023, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details