தமிழ்நாடு

tamil nadu

பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 'மைசூர் பேட்டா' அணிவித்து வாழ்த்து கூறிய சித்தராமையா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:03 PM IST

karnataka chief minister siddaramaiah: சந்திரயான் 3-ன் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிரக்கப்பட்டதையடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு நேரில் சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைப்பாகை (மைசூர் பேட்டா) கட்டிய முதல்வர் சித்தராமைய்யா
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைப்பாகை (மைசூர் பேட்டா) கட்டிய முதல்வர் சித்தராமைய்யா

பெங்களூரு:உலக நாடுகளில் இது வரை எந்த நாடும் முன்னெடுக்காத செயலான நிலவின் தென் துருவப் பகுதியில் முதல்முதலாக கால் பதித்து தன் வெற்றியை நிலைநாட்டியது சந்திரயான் 3. நிலவில் சந்திரயான் 3 லேண்டர் கால் பதித்த தருணம், நாடு முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க தருணமாக அனைவரது மனதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரூபாய் 615 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான் 3. தொடர்ந்து 10 கட்டங்களாக 39 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப் பாதையில் நேற்று (ஆக.23) மாலை 6.04 மணி அளவில் நிலவின் தென் துருவ பகுதியில் இறங்கியது. இதனால் உலக அளவில் நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது.

இந்த வெற்றியை இஸ்ரோ மட்டுமின்றி இஸ்ரோ-வுடன் இணைந்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மாணவ மாணவிகள், பொது மக்கள் என நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி மற்றும் இத்திட்டத்தில் பங்காற்றிய இஸ்ரோ அதிகாரிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேரடி கானொளி மூலம் இணைந்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அவர், இந்தியா திரும்பிய பின் இந்த திட்டத்தில் பங்காற்றிய அனைத்து இஸ்ரோ அதிகாரிகளையும் நேரில் சந்திப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை கவுரவிக்கும் வகையிலும், நேரடியாகச் சென்று, இத்திட்டத்தில் பங்காற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அவரது பாராட்டைத் தெரிவித்தார்.

பின்னர், இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி மைய இயக்குநர் சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், உதவி திட்ட இயக்குனர் கல்பனா, இயந்திர பராமரிப்பு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஆகியோரை கவுரவிக்கும் வகையில், அம்மாநிலத்தின் மதிப்புமிக்க அடையாளமாக கருதப்படும் மைசூர் பேட்டா (தலைப்பாகை)-யை சூட்டி, இனிப்புகள் வழங்கி இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடினார்.

முன்னதாக வரலாற்று சிறப்பை பெற்றுத்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத உழைப்பை கவுரவிக்கும் வகையில், அரசின் சார்பாக விதான்சௌடா தளத்தில் விஞ்ஞானிகள் அனைவரும் கௌரவிக்கப்படுவர் என்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.

சந்திரயான் 3 வெற்றி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ”நிலவின் தென் துருவ பகுதியில் இதுவரை எந்த நாடு நுழையாதிருந்த நிலையில், தற்போது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் கால் பதித்து வரலாற்றில் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. அறிவியல் உலகில் இஸ்ரோ அசாதாரண சூழலையும் கடந்து, நேற்று(ஆக.23) நிலவின் தரைப்பரப்பில் மெதுவாக தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றி இஸ்ரோவின் ஏறத்தாழ 500 விஞ்ஞானிகளின் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. 3 லட்சத்தி 84 ஆயிரம் கி.மீட்டரைக் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி கட்டியுள்ளது" என பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி அக்னிகுல் நிறுவனத்தின் ”3டி பிரிண்டிங் முறையில் ராக்கெட்” செப்டம்பரில் பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details