ETV Bharat / state

சென்னை ஐஐடி அக்னிகுல் நிறுவனத்தின் ”3டி பிரிண்டிங் முறையில் ராக்கெட்” செப்டம்பரில் பரிசோதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 5:46 PM IST

iit chennai: சென்னை ஐஐடியின் ஸ்டார்ட் அப் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ், ஆந்திராவில் உள்ள தனது ஏவுதளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒருபகுதியாக, ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

அக்னிகுல் நிறுவனத்தின் ”3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கிய ராக்கெட்” செப்டம்பரில் பரிசோதனை
அக்னிகுல் நிறுவனத்தின் ”3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கிய ராக்கெட்” செப்டம்பரில் பரிசோதனை

அக்னிகுல் நிறுவனத்தின் ”3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கிய ராக்கெட்” செப்டம்பரில் பரிசோதனை

சென்னை ஐஐடியின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல், ”3 டி பிரிண்டிங் முறையில் உருவாக்கிய ராக்கெட்டை”, செப்டம்பர் மாதத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், தனது முதல் சோதனையை நடத்தும் என்றும் அதனைத் தொடர்ந்து செயற்கைக் கோள் ஏவும் பணியும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், ராக்கெட் ஏவும் பணிகள் நடைபெறும் நிலையில், அதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கண்காணிக்கும் என சென்னை ஐஐடியின் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மாணவர்களின் ”அக்னிகுல்” ஸ்டார்ட் அப் நிறுவனம், 3டி பிரிண்டிங் முறையில் ”அக்னிபான்” என்னும் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த அக்னிபான் ராக்கெட்டின் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய சாட்லைட்டுகளை விண்ணில் செலுத்த முடியும். அதனைத்தொடர்ந்து, விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில், பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் அதனை நிலைநிறுத்தவும் முடியும்.

மேலும், வருங்காலங்களில் குறைவான செலவில் விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் ஏவப்படும். வருகிற 2025 ஆண்டு முதல் அக்னிபான் ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பப்படும். அதனைத்தொடர்ந்து, தனியார் நிறுவனத்தின் சார்பாக ”அக்னிகுல் ராக்கெட் ஏவுதளம்” அமைக்க அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்னிகுல் ராக்கெட்டின் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு, தையூர் வளாகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

அக்னிபான் ராக்கெட்டின் பாகங்கள் ஒருங்கிணைப்பு செயல்முறையைத் தொடங்கியதாகவும், இது அக்னிகுலின் காப்புரிமை பெற்ற அக்னிலெட் இயந்திரத்தால் இயக்கப்படும், சிங்கிள் ஸ்டேஜ் லாஞ்ச் வாகனமாகும். (a single-stage launch vehicle). முற்றிலும் 3D பிரிண்டிங் முறையில் செய்யப்பட்ட ராக்கெட்டானது, அதன் வழித்தடத்தில் இருந்து ஏவப்படும் பொழுது, திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே சென்று, அதன் சுற்றுவட்டாரப் பாதையில் பயணிக்கும்.

அக்னிபான் ராக்கெட் குறித்து சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர், எஸ் ஆர் சக்ரவர்த்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இஸ்ரோவால் அக்னிகுலுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட இடத்தில், ஏவுதளமானது கடந்தாண்டு நவம்பர் மாதம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 15 ந் தேதி சுதந்திர தினத்தன்று ஏவக் கூடிய ராக்கெட்டை நிலை நிறுத்தி உள்ளோம். முதன் முதலாக இஸ்ரோவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் ராக்கெட்டை 2 பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இரண்டு பரிசோதனையில், ஒன்று குறுகியக்கால சோதனை மற்றொன்று நீண்டக்கால சோதனையாகும்.

நீண்டக்கால சோதனை என்பது, ராக்கெட் எவ்வளவு தூரத்திற்கு இயங்குமோ, அந்த நேரத்திற்கு நிற்க வைத்து ராக்கெட்டின் எரிபொருளை எரிக்க வேண்டும். அவற்றை செய்து காண்பித்தால், இஸ்ரோ ராக்கெட்டை ஏவுவதற்கு ஒப்புக்கொள்வார்கள். மேலும், இஸ்ரோவிற்கு ”ஆதித்யா 1” உள்ளிட்ட பல ராக்கெட் ஏவ வேண்டிய நிலை உள்ளதால் அக்னிபான் மூலம் ஏவுவதற்கு தேதியை அவர்கள் அறிவிப்பார்கள்.

மேலும், இஸ்ரோவிற்கும் செல்லும் தரவுகளை அவர்கள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள். பொதுவாக, ராக்கெட், பாதை தவறி செல்லும் போது, அதனை சுக்கு நூறாக உடைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் பட்டன், அக்னிபான் ராக்கெட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. ராக்கெட்டானது, செப்டம்பர் கடைசியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ ஏவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

மேலும், தற்பொழுது ஏவப்படுவது ”சப் ஆர்பிட்டல் ராக்கெட்”. இது தொழில்நுட்ப பரிசோதனைக்காக செய்வது. மேலும், இவை அதிக உயரத்திற்கு செல்லப்போவதில்லை. 30 முதல் 40 கிலோ மீட்டர் உயரத்திற்கு மட்டுமே செல்லப் போகிறது. திரவ ராக்கெட் என்பதால், ஏவுவதற்கான முறையின் படி ஏவுதளத்தில் இருந்தே பரிசோதனை செய்ய உள்ளோம்.

விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டில் அதிகமான என்ஜின்கள் இருக்கும். அவை அனைத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அழுத்தத்தை கொடுக்க வேண்டும். கண்ட்ரோல் என்பது சாதாரண ராக்கெட்டில் இருக்காது. அதனை பற்ற வைத்தப்பின்னர் தீபாவளி ராக்கெட் போல் செல்லும். நாம் செய்வது வெர்டிக்கல் லாஞ்ஜ், எனவே அதற்கான தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ராக்கெட்டானது பாதையில் இருந்து தவறி சென்றால் அதனை அழிப்பதற்கான பட்டன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,விண்வெளிக்கு செல்லும் எல்லா தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 2 நிலையில் பிரிந்து செல்வதற்கான தொழில்நுட்பம் இன்னும் பொருத்தப்படவில்லை. விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டில், பிரிந்து செல்லும் தொழில் நுட்பம் பரிசோதனை செய்யப்படும். ராக்கெட்டில் விமானத்தில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் மற்றும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தையூர் வளாகத்தில், அதற்கான எலக்ட்ரிக் மோட்டார், பம்பு போன்றவற்றையும் தயார் செய்து வருகிறோம். பம்பானது, வேகமாக செயல்பட்டு மண்ணெண்ணையோ, ஆக்சிஜனோ எடுத்து இன்ஜினுக்கு அனுப்பி விட்டால் முதல்கட்ட வெற்றியாகும். அடுத்து 4 இன்ஜினை கிளஸ்டர் செய்து பரிசோதனை செய்வோம். 2ஆம் நிலையில் ஒரே ஒரு இன்ஜின் தான். இறுதியாக இரண்டையும் இணைத்து ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், ராக்கெட் ஏவுதளத்தை விரிவாக்கம் செய்யலாம் என திட்டமிட்டு வருகிறோம். தற்பொழுது 800 சதுர அடியில் உள்ள ராக்கெட் ஏவுதளம் சிறிய ராக்கெட்டிற்காக உருவாக்கியது. இவை தான் உலகத்திலேயே மிகவும் குறுகிய ஏவுதளமாகும். இதனை பெரியதாக்க இஸ்ராேவில் அனுமதி காெடுத்தால் மேலும் பெரிதாக்கப்படும் என்றார்.

இந்நிலையில், 3 டி பிரிண்டிங் முறையில் ஒரு இன்ஜினை, 3 நாட்களில் செய்ய முடியும். அதைபோல் 3 பிரிண்டரை பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் ராக்கெட்டை உருவாக்க முடியும். தற்போதைய நிலையில் செயற்கைக் கோள்கள் எடை மற்றும் அளவு குறுகிக் கொண்டு வருகிறது. எனவே நாம் பழங்காலம் மாதிரி பெரிய ராக்கெட் அனுப்ப வேண்டியதில்லை. தற்பொழுதைய நிலையில் சிறிய செயற்கைக் கோள்களை ஒன்றாக சேர்த்து ஒரு பஸ் மாதிரி அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

ஒவ்வொரு செயற்கோளும் ஒரு ஆர்பிட்டில் இருக்க வேண்டும், என இருந்தால் கடினமாக இருக்கும். எனவே, அக்னிபான் ஊபர் டூ ஸ்பேஸ் மாதிரி, ஒரு டாக்ஸி போல் நாம் எங்கு செல்ல வேண்டுமோ, நம்மை மட்டும் கொண்டு செல்வது மாதிரி, எந்த செயற்கைக் கோள் எங்கு செல்ல வேண்டுமோ ,எப்போது தேவையோ, அப்போது ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சட்டப்படி தான் செயல்பட்டு வருகிறோம். இந்த சட்டம் பாதுகாப்பானதாகும். யார் வேண்டுமானாலும் ராக்கெட் ஏவலாம் என கூறினால், தேசத்திற்கு எதிரான செயலில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. எனவே தான் இஸ்ராேவின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அக்டோபர் 2017ஆம் ஆண்டு அக்னிகுல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 2018 ம் ஆண்டு ஜனவரியில் பணிகள் துவங்கப்பட்டது. ஐந்தரை ஆண்டுகள் கடந்த நிலையில் , ஏவுதளம் அமைக்கப்பட்டு, ராக்கெட் ஏவும் நிலைக்கு வந்துள்ளோம். 2024 முதல் ராக்கெட் ஏவப்பட்டால், 2025 ல் பலகட்டங்களாக ராக்கெட் ஏவ முடியும். தற்போது, 100 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள் அனுப்ப உள்ளோம். 2025க்கு பின்னர் அதிக எடை உள்ள செயற்கைக்கோள் அனுப்பும் பணி செய்யப்படும்.

இஸ்ரோ கண்காணிப்பில், சிறிய அளவில் ராக்கெட் ஏவுதளம் அமைத்துள்ளோம். இதனால் மற்றவர்களின் ராக்கெட்டுகளை கொண்டு வந்து ஏவுவதற்கு ,வசதி செய்துக் கொடுக்க முடியாது. இந்திய அரசின் ஒப்புதலுடன், பிற நாடுகளுக்குச் சென்று ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு செயற்கைகோளை ஏவ முடியும். செயற்கைக் கோள் நமது நாட்டில் குறைவாகத் தான் செய்கின்றனர். தனியார் செயற்கைக் கோள்களும் ராக்கெட்டின் மூலம் ஏவப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது...? இஸ்ரோ கொடுத்த அதிரடி அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.