தமிழ்நாடு

tamil nadu

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.204.30 கோடி வசூல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:47 PM IST

Sabarimala Ayyappan temple: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 39 நாட்களில், உண்டியல் காணிக்கையாக ரூ.204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

Sabarimala Ayyappan temple
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.204.30 கோடி வசூல்

கேரளா: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது நடைபெற்று வரும் மண்டல பூஜை நாளை(டிச.27) நிறைவடைகிறது. அதன்பின் கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் மகர விளக்குப் பூஜைக்காக வரும் டிச.30ஆம் தேதி நடை திறக்கப்படும். இந்நிலையில் கார்த்திகை 1 முதல் மார்கழி 9 வரை அதாவது 39 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் விவரங்களை தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரஷாந்த் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 39 நாட்களில் ஐயப்பன் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.204.30 கோடி ரொக்கப் பணமாகக் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அரவனை பாயாச விற்பனையில் ரூ.96.32 கோடி, அப்பம் விற்பனையில் ரூ.12.38 கோடி கிடைத்துள்ளது என்று கூறினார். இதுவரை சபரிமலையில் 31 லட்சத்து 43 ஆயிரத்து 163 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் எனவும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 49 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சபரிமலையில் மண்டல பூஜை நாளை(டிச.27) நிறைவடைவதால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு நாளும் சபரிமலையில் கூட்டம் அலைமோதுவதால், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றத்தில் தேவசம் போர்டு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் வரும் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் பிரசாத சுத்தி கிரியையும், பிம்பசுத்திகிரியையும் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகரசம்கிரமா பூஜை நடத்தப்பட்டு மாலை 5 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும், பின் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி, மகர ஜோதி தரிசனம் நடைபெறும் என்றார்.

அதன்பின், ஜனவரி 20ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜனவரி 21ஆம் தேதி பந்தள ராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பின்னர் பாதை அடைக்கப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியா கூட்டணி - ஜக்கிய ஜனதா தளம் இடையே எந்த விரிசலும் இல்லை..! நிதிஷ் குமார் விளக்கம்..

ABOUT THE AUTHOR

...view details