காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (செப் 11) ஆலோசனை மேற்கொண்டார்.
அடுத்த சில மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். "உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டேன். மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினரும் தங்களின் சிறப்பான ஆலோசனையை பகிர்ந்துகொண்டனர். அனைவரின் பங்களிப்புடன் உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும்" என ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள 30 ஆயிரம் கிராமங்களுக்கு கட்சித் தலைவர்கள் நேரடியாக சென்று பரப்புரை செய்யும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கிவைத்தது.
மாநிலத்தை ஆளும் பாஜகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேர்தல் குழுவை அமைத்துள்ளது.
இதையும் படிங்க:தடுப்பூசி தகவல்கள் விரல் நுனியில் - கோவின் தளத்தில் புதிய வசதி