டெல்லி:இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி கடந்த ஞாயிறு (ஜூலை 31) அன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி உரையாடினார். இந்த வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" ஒரு வெகுஜன இயக்கமாக மாறி வருவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கில் தேசிய கொடியை மாற்றினார் இந்நிலையில் மோடி கேட்டுக்கொண்டதையடுத்து இன்று(ஆகஸ்ட் 2) அவரது ட்விட்டர் புரொபைல் போட்டோவை மாற்றியுள்ளார். அதில் அவர், ‘எனது சமூக வலைதளப் பக்கங்களில் டிபியை மாற்றியுள்ளேன், அதையே செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதால், அவருக்கு மரியாதை செலுத்தினார் மோடி. அவர் குறித்து அவரது ட்விட்டரில் "நாம் மிகவும் பெருமைப்படக்கூடிய மூவர்ணக்கொடியை நமக்களித்த பிங்கலி வெங்கையாவின் முயற்சிகளுக்கு தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். மூவர்ணக் கொடியில் இருந்து வலிமையையும் உத்வேகத்தையும் எடுத்துக் கொண்டு, தேசிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!