தமிழ்நாடு

tamil nadu

மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் வேண்டும்!

By

Published : Jun 21, 2022, 10:20 PM IST

மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் வேண்டும்

இந்தியாவில் வகுப்பறைக் கல்வி, தொழில் துறை திறன்களுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது வேலையின்மைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் நாட்டில் 10 கோடி வேலை வாய்ப்புகள் இருந்தும், திறமையானவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. இதுகுறித்து இங்கு காண்போம்.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற நிலை அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் பலரும் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். சிலர் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இல்லாமல் வேறு துறையில் பணிபுரிந்து வருவர். இதற்கு ஆய்வுகள், தரவுகள் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் தொழில் நுட்பம், காலச்சூழலுக்கு ஏற்ப வகுப்பறைக் கல்வியில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. வகுப்பறைக் கல்விக்கும் தொழில் துறை திறன்களுக்கும் இடைவெளி அதிகரித்துள்ளது.

ஐடி, இன்ஜினியரிங், பிற நிறுவனங்கள் என 60 விழுக்காடு நிறுவனங்களில் திறமையான ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கூறுகையில், இந்தியா முழுவதும் 10 கோடி வேலை வாய்ப்புகள் இருந்தும், அந்த வேலைகளுக்கு ஏற்ற திறமையானவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவே கூறுகிறது.

இளைஞர்கள் இந்த வேலைக்கான தகுந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். 20க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகம் மற்றும் அதன் துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திறன்-மேம்பாடு திட்டங்கள் இந்த நோக்கத்திற்கு உதவினாலும், குறைந்த அளவிலேயே செயல்படுத்தப்படுகிறது.

அறிவு சார்ந்த சமூகத்தில், பொறியியல் பட்டதாரிகள் புதுமையான வேலைகள், மேம்பட்ட சிந்தனை, சேவைகளுக்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், அவ்வாறு உள்ளவர்கள் மிகவும் குறைவான விழுக்காடு தான் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளைத் தொடர்பவர்களின் நிலையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. கல்வியில் தொழில் துறைக்கான திறன்கள் இல்லை. இந்த பட்டங்கள் வேலைவாய்ப்பில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பெரும்பாலான இளைஞர்கள் சிறந்த வேலைகளுக்கான தேடலில் தோல்வியடைகிறார்கள். ஏனெனில் அதற்கான தகுந்த திறன் இல்லாததே காரணமாகப் பார்க்கப்படுகிறது. தொழில் துறை திறன்களான பிரச்னைக்குத் தீர்வு, தொலைநோக்கு சிந்தனை, ஆராய்ச்சி, எண்ணங்களைத் திறம்பட வெளிப்படுத்தாமல் இருத்தல் ஆகியவை பற்றாக்குறையாக கூறப்படுகிறது.

இறுதியில், கிடைத்தவேலையில் சமரசம் செய்துகொண்டும், குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் கட்டாயத்திற்கும் உள்ளாகுகின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டிய, ஊக்கமளிக்க வேண்டிய இளைஞர்கள், இவ்வாறு மனச்சோர்வடைந்தால் அது நாட்டுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

இந்தியாவை உலக அளவில் டிஜிட்டல் திறன் மையமாக மாற்ற வேண்டும் என்ற அரசின் லட்சியம் நிறைவேற வேண்டுமானால், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் அறிவுத்திறனை மெருகூட்ட வேண்டும். இந்த நோக்கத்தை நோக்கி, குறுகிய மற்றும் நீண்ட கால உத்திகள் கொண்ட பயிற்சித் திட்டங்கள் விரிவாக செயல்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முயற்சியுடன் செயல்பட்டு, இந்த நோக்கத்திற்காக அதிக நிதியில் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தொழிற்கல்வியை பள்ளிக்கல்வியில் இருந்தே கற்றுத் தர வேண்டும். கல்விக்கும் தொழில் துறைக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் குறைபாடுகள் சரி செய்யப்பட வேண்டும்.

எல்லா நிலைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான கல்வி உருவாக்கப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் இதை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசத்தை உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியாவில் தயாராகும் வங்கி பயன்பாட்டிற்கான மென்பொருள்: ஐஐடி இயக்குநர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details