தமிழ்நாடு

tamil nadu

Lathicharge on protestors: மராத்தா போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி - அரசியல் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:43 PM IST

மகாராஷ்டிரா ஜல்னா மாவட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய விவகாரத்திற்கு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

ஜல்னா (மகராஷ்டிரா): ஜல்னா மாவட்டத்தில் மராத்தா போராட்டக்காரர்கள் (Maratha protesters) மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதை அடுத்து எதிர்கட்சித் தலைவர்கள், ஷிண்டே ஃபட்னாவிஸ் அரசை (Shinde Fadnavis government) விமர்சித்துள்ளனர். இது குறித்து சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜய் வத்தேதிவார் கூறுகையில், “போராட்டக்கரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு, மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறி ஏமாற்றியுள்ளது. மக்களிடம் பொய் கூறி வாக்குகளை பெற்றுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வீதியில் இறங்கி போராடுகின்றனர். அவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்துவது கண்டித்தக்கது” என தெரிவித்தார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் கூறுகையில், “ஜல்னாவில் நடந்து வரும் போராட்டத்தை மனிதாபிமானமற்ற முறையில் நசுக்கிய மாநில அரசின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக கண்ணீர் புகை வீசி தடியடி நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மராத்தா இட ஒதுக்கீடு விஷயத்தில் மாநில அரசு தனது பலத்தை பயன்படுத்தி இந்த இயக்கத்தை நசுக்க முடியாது. மாறாக, மராத்தா இட ஒதுக்கீட்டை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த தெளிவான நிலைப்பாட்டை மாநில அரசு அறிவித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது சரியாக நடக்காததால், மராட்டிய சமூகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மராத்தா இட ஒதுக்கீடு வழங்க இந்திரா சாவ்னி மற்றும் பிற நீதிமன்ற வழக்குகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வரம்பை தளர்த்த வேண்டும். இது குறித்து பலமுறை கவனத்தில் கொண்டும், மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், இட ஒதுக்கீட்டிற்காக மராத்தா சமூகம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய தருணம் வந்துள்ளது” என விமர்சித்தார்.

தொடர்ந்து, ஸ்வராஜ்ய கட்சியின் (Swarajya Party) தலைவர் சம்பாஜிராஜே சத்ரபதி கூறுகையில், “அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மராத்தா இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் தீவிரமாக நடத்து வருகிறது. இந்த போராட்டத்தை நடத்தியவர்களை அரசியல் சாசன முறையில் காவல் துறையினர் சுற்றி வளைத்து மனிதாபிமானமற்ற முறையில் தடியடி நடத்தினர்.

இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த யாருடைய உத்தரவின் பேரில் நடந்தது என்பது குறித்து உள்துறை அமைச்சர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். மராத்தா சமூகத்தினருக்கு எதிராக இந்த அரசு நடந்துகொள்ளும் விதத்தினால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு, மாநில உள்துறை அமைச்சரும், இந்த ஆளும் அரசாங்கமும்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க:Mumbai Opposition Meeting: பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details