தமிழ்நாடு

tamil nadu

என்னை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது - மணீஷ் சிசோடியா

By

Published : Oct 17, 2022, 10:18 AM IST

குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வதை தடுப்பதே பாஜகவின் நோக்கம் - மணீஷ் சிசோடியா ட்வீட்
குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வதை தடுப்பதே பாஜகவின் நோக்கம் - மணீஷ் சிசோடியா ட்வீட் ()

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் சிபிஐ என்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். அதோடு குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வதை தடுப்பதே பாஜகவின் நோக்கம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி புதிய மதுபானைக் கொள்கை வழக்கு விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்தி வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் வீடு, இந்தோ பிரிட்ஸ் உரிமையாளர் சமீர் மகேந்திரு, குருகிராம் பட்டி ரீடெயில் பிரைவட் லிமிடெட் இயக்குனர் அமீத் அரோரா மற்றும் இந்தியா அஹெட் நியூஸ் நிர்வாக இயக்குனர் மூதா கவுதம் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பின் சமீர் மகேந்திரு, ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் விஜய் நாயர், ஹைதராபாத் தொழிலதிபர் அபிஷேக் போயின்பல்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று (அக் 16) டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை இன்று (அக் 17) நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு “சிபிஐ அலுவலகத்திற்கு சென்று எனது முழு ஒத்துழைப்பையும் தருவேன். வாய்மையே வெல்லும்” என மணீஷ் சிசோடியா ட்வீட் செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று மணீஷ் சிசோடியா சிபிஐ முன்பு நேரில் ஆஜராக உள்ளார். இதுகுறித்து மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என் மீது முழுக்க முழுக்க பொய் வழக்கு போட்டு என்னைக் கைது செய்ய தயாராகிறார்கள். எதிர்வரும் நாட்களில் நான் குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல இருந்தேன். இவர்கள் (பாஜக) குஜராத்தில் படுமோசமாக தோற்கிறார்கள். குஜராத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்வதைத் தடுப்பதே அவர்களின் (பாஜக) நோக்கம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மதுபானக் கொள்கை ஊழல் - மணீஷ் சிசோடியாவிடம் நாளை சிபிஐ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details