டெல்லி:கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தின் அதிநவீன எஃப்-16 ரக விமானம் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விரட்டியடித்தனர்.
இந்திய வீரர் அபிநந்தன் மிக்-21 வகை போர் விமானத்தைக் கொண்டு பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்தார். எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால், பாராசூட் மூலம் அவர் குதித்துத் தப்பினார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைதுசெய்யப்பட்டார்.
பரம் வீர் சக்ரா - மகா வீர் சக்ரா - வீர் சக்ரா
இந்த விவகாரத்தில் பன்னாட்டுத் தலையீடு, இந்திய தரப்பின் விரிவான அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் அவரை விடுவித்தது. பாகிஸ்தானின் அதிநவீன விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் ஹீரோ ஆனார்.
அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சில நாள்கள் ஓய்வில் இருந்த அபிநந்தன் மீண்டும் பணிக்குத் திரும்பினார். பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டு இந்தியா திரும்பிய அவருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
போர் காலங்களில் இந்திய படையினரின் வீரதீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் பரம் வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. போர் மற்றும் போர் அல்லாத காலங்களில் எதிரிகளின் முன்னிலையில் படையினர் செய்த வீரதீரச் செயலுக்காக மகா வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. போர் அல்லாத அமைதி காலங்களில் இந்தியப் படையினரின் வீரதீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் வீர் சக்ரா விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வீர் சக்ரா விருதுபெற்றார்
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற விழாவில் வீர் சக்ரா (Vir Chakra) விருதினை இந்திய விமான படையின் குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு (IAF Group Captain Abhinandan) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
முன்னதாக, இந்திய விமான படையின் விங் கமாண்டராக இருந்த அபிநந்தன், குரூப் கேப்டனாக நவம்பர் 3ஆம் தேதி பதவி உயர்வு பெற்றார்.
இதையும் படிங்க: அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு