தமிழ்நாடு

tamil nadu

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக பயணிகள் தரையிறக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 10:36 PM IST

Hoax Bomb Threat At Kochin international Airport: கொச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில் வெடி குண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kochi airport bomb Threat: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..அவசரமாக பயணிகள் தரையிறக்கம்
Kochi airport bomb Threat: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..அவசரமாக பயணிகள் தரையிறக்கம்

கேரளா: கொச்சி விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. 6E6482 என்ற இண்டிகோ விமானத்திற்கு இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.30 மணியளவில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபரால் தொலைப் பேசி மூலம் வந்த தகவலால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்ததையடுத்து விமான நிலைய அதிகாரிகள் நெடும்பசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மர்மநபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் கொச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தை உடனடியாக அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.

பின்னர், விமானத்திலிருந்த 139 பயணிகளும் ஒரு கைக்குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு விமான நிலையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணைக்கு விமான நிலைய இயக்குநரின் தலைமையில் வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டது. அதில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் QRT சோதனையில் ஈடுபட்டது. பின்னர், மாநில காவல்துறை மற்றும் கொச்சி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் RFF அடங்கிய பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் உயிரிழந்தவரின் பெயரில் மோசடி.. துணை மேயர் உள்பட 6 பேர் மீது வழக்கு!

பயணிகளின் உடைமைகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையிட்டனர். இந்நிலையில் சோதனையின் போது எந்த விதமான வெடி குண்டுகளும் கிடைக்கவில்லை. இதையடுத்து அடையாளம் தெரியாத நபரால் வதந்தி வந்துள்ளது என விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். தீவிர பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர் மதியம் 2:24 மணிக்கு இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு சென்றது.

இந்த வெடிகுண்டு மிரட்டலால், விமான நிலையத்திற்கு வந்த அனைத்து விமானங்களிலும் பலத்த சோதனை நடத்தப்பட்டது. மேலும், அந்த மர்ம நபரை நெடும்பசேரி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் கட்ந்த ஆகஸ்ட் 1ம் தேதி இதுபோன்று நெடும்பசேரி விமான நிலையத்திலிருந்து மும்பை செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் அது போலியான தகவல் எனத் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details