தமிழ்நாடு

tamil nadu

பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை முன்னேற்றம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

By

Published : Feb 5, 2023, 7:26 AM IST

பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

சென்னை:பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், "புதிய இந்தியா - பல வாய்ப்புகள்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது, "இந்தியா மாபெரும் மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில், மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில், இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி விளங்குகிறார். 50 முதல் 60 ஆண்டுகளாக, திறமையான இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.

தற்போது அதை கடந்தும் பல துறைகளில் முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம். 100 ஆண்டுகளில் நாம் பார்க்காத மாற்றங்களை ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் உலகளவில் ஏதாவது பிரச்னை என்றால் இந்தியாவை நாடி வரும் சூழல் உருவாகி உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் பிரச்னைக்கு, இந்தியாவால் தான் தீர்வு கொண்டு வர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது. சில ஆண்டுளுக்கு முன் இந்தியாவின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. வெகு விரைவில் மேற்கத்திய நாடுகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையைஅ டைய போகிறோம்.

பொருளாதாரத்தில், உலக அளவில் இந்தியா தலைசிறந்த நாடாக மாற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். விமான போக்குவரத்து துறையை பொருத்தவரையில் உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்துக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது.

2013 - 14 ஆண்டுகளில் 70 மில்லியன் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது 144 மில்லியன் பயணிகள் இந்தியாவில் விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். 60 மில்லியன் பயணிகள் சர்வதேச விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 400 மில்லியன் ஆக உயரும்.

சுதந்திரம் அடைந்த பின் 64 ஆண்டுகளில், நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 147 விமான நிலையங்கள் இந்தியாவில் உள்ளது. அடுத்த மாதம் பிரதமர் மோடி 148-வது விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

2013 ஆம் ஆண்டு 400 விமானங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கும். விமான போக்குவரத்து துறை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில் ஐந்து சதவீதம் பெண் பைலட்கள் உள்ள நிலையில் இந்தியாவில் 15 சதவீதம் பெண் விமானிகள் உள்ளனர். பல்வேறு அபிவிருத்தி பணிகள், மேம்பாட்டு பணிகள் விமான போக்குவரத்து துறையில் நடைபெற்று வருகின்றன. விமான போக்குவரத்து துறை மூலம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்று விமான போக்குவரத்து தொடர்பாக கல்வி கற்று வந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே கல்வி கற்கும் நிலை உருவாகி உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பங்களிப்பு முக்கியமானது. இளைஞர்கள், பெண்கள் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்.

தற்போது நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை, 90 கோடியாக உள்ளது. இளைஞர்கள் எப்போதும், புதுமையாக சிந்திக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளுங்கள். மாற்றத்தை கண்டு பயப்படாதீர்கள்" என்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:vani jairam: பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details