தமிழ்நாடு

tamil nadu

விராட் கோலிக்கு தங்க பேட் பிறந்த நாள் பரிசு! யார் கொடுத்தா தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 12:53 PM IST

Virat Kohli: விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் பேட்டை மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் பரிசளித்து உள்ளது.

Virat Kohli
விராட் கோலி

கொல்கத்தா: இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என அனைவரும் அழைக்கப்படும் விராட் கோலி, தனது 35வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தங்க முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் பேட்டைவ் பரிசாக வழங்கி உள்ளது.

முன்னதாக விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள வீரர்களின் ஓய்வறைக்கு பிரம்மாண்ட கேக் ஒன்றை பரிசாக அனுப்பியதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சினேகாசிஷ் கங்குலி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சினேகாசிஷ் கங்குலி கூறுகையில், "கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விராட் கோலியின் டிரஸ்ஸிங் ரூம்க்கு பெரிய கேக் ஒன்றும், தங்க முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் மட்டையும் பரிசாக அனுப்பப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

விராட் கோலியின் வாழ்க்கை பயணம் : தன்னுடைய 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்த விராட் கோலி, இன்று தனது 35வது பிறந்த நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் காணுகிறார். டி20 மற்றும் ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், இன்னும் ஒரு சதம் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் சாதனை சமன் என பல்வேறு சாதனைகளை தன்னகத்தே வைத்து உள்ளார் விராட் கோலி.

பிறந்த நாளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 8வது லீக் ஆட்டத்தில் இன்று (நவ. 5) தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், அங்கு விரைந்து உள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் ஏற்கனவே அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், முதலிடத்தை யார் பிடிப்பது என போட்டி போட்டுக் கொண்டு உள்ளன. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடர்ந்து 8வது வெற்றியை பெற இந்திய அணியும், இன்றைய ஆட்டத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க தென் ஆப்பிரிக்க அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க:Virat Kohli Birthday : பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிங் கோலி! சிறப்பு தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details