கதிஹார்: பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் மின் விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கதிஹார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற மின் விநியோகத்திற்கு எதிராக பார்சோய் பிளாக் அலுவலகத்தில் அதிக அளவிலான மக்கள் ஒன்று திரண்டு உள்ளனர். ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
கதிஹார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் இதுவரை ஒரு மரணத்தை மட்டுமே உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், "இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்து உள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தற்போது சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. முழு விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகுதான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். உயிரிழந்த 3 பேரில் இரண்டு பேர் பாசல் கிராமத்தைச் சேர்ந்த முகமது குர்ஷித் (35), சாப்பகோட் பஞ்சாயத்தைச் சேர்ந்த நியாஸ் ஆலம் (32) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும், பலர் தடியடி நடத்தியதில் காயமடைந்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.