தமிழ்நாடு

tamil nadu

உத்தவ் தாக்ரே - சரத் பவார் - நிதிஷ் குமார் சந்திப்பு - பாஜகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்!

By

Published : May 11, 2023, 10:10 PM IST

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Nitish kumar
Nitish kumar

மும்பை :2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணியில் பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்குச் சென்ற நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தெற்கு மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டிற்குச் சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், "ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாட்டின் நிலையைப் பார்க்கும்போது, ஒன்றாக செயல்பட்டால், மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிகிறது'' என்று கூறினார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்றும், தனது கணிப்பின் படி, கர்நாடக மக்கள் பாஜகவை விரட்டி மதச்சார்பற்ற அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் சரத் பவார் கூறினார். முன்னதாக சிவ சேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரேவை, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சந்தித்தனர். மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்குச் சென்ற நிதிஷ் குமார், அவருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒடிசா தலைநகர், புவனேஸ்வர் சென்ற நிதிஷ் குமார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் அரசியல் குறித்து எந்தவித கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நவீன் பட்நாயக், இரு பழைய நண்பர்கள் சந்தித்து கொண்டதாகவும், அரசியல் குறித்து கலந்துரையாடவில்லை என்றும் கூறினார்.

இதனிடையே 2024 நாடாளுமன்றத் தேர்தலை, பிஜு ஜனதா தளம் கட்சி தனித்து எதிர்கொள்ளப்போவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார், கடந்த மாதம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச எதிர்க் கட்சி மற்றும், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோருடனும் அண்மையில் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தினார். அதேபோல், கடந்த மாத தொடக்கத்தில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தலைநகர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருடனும் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக எல்லா எதிர்க் கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க :நிர்வாக சேவைகளில் ஆளுநரைவிட முதலமைச்சருக்கே அதிகாரம் அதிகம் - உச்ச நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details