தமிழ்நாடு

tamil nadu

பஞ்சாப்பில் களைகட்டிய மாரியம்மன் திருவிழா; கரகம், தவில், ஓயிலாட்டம், அலகு குத்தல் என பக்தர்கள் பரவசம்!

By

Published : May 8, 2022, 11:56 AM IST

Punjab Marriamman Temple
Punjab Marriamman Temple

அமெரிக்காவில் விநாயகர் கோயில், மலேசியாவில் முருகன் கோயில், கம்போடியாவில் சோழர் கால கோயில் என நாம் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் மாரியம்மன் ஆலயமும் இணைந்துள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாவில், அலகு குத்தல், தவில், கரகம், ஒயிலாட்டம் என அனல் பறப்பது கூடுதல் சிறப்பு.

சண்டிகர்: தமிழர்கள் உலகம் முழுக்க வசிக்கின்றனர். இவர்கள் கால்தடம் படாத நாடே இல்லை. கடல் கடந்து பல நாடு கடந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தங்களின் கலாசார மற்றும் பண்பாட்டை இவர்கள் என்றும் மறப்பதில்லை.

இதைப் பறைச்சாற்றும் விதமாக பஞ்சாப்பிலும் ஒரு தமிழ் கலாசார திருவிழா தொடர்கிறது. அது என்ன தமிழ் கலாசார திருவிழா. வாருங்கள் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சாப். இதன் தலைநகர் சண்டிகரில் இருந்து 222 கிலோ மீட்டரில் பாடலா என்ற நகர் அமைந்துள்ளது.

பஞ்சாப் மெட்ராஸ் மாரியம்மா!

பஞ்சாப் மாரியம்மன்: இந்த நகரில் தமிழர்கள் வணங்கும் மாரியம்மன் திருக்கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தமிழர்கள் பங்கெடுத்து திருவிழா கொண்டாடினார்கள். கரோனா பரவல் தடைக்கு பின்னர் நடைபெறும் திருவிழா என்பதால் தமிழர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

இது குறித்து பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் தமிழரான கணேஷ் குமார் என்பவர் கூறுகையில், “நாங்க இங்க பல தலைமுறைக்கு முன்னால வந்தோம். இப்போ வர இங்கதான் இருக்கோம். மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு பலரும் வருவாங்க. அலகு குத்துவோம், முதுகில் குத்தி தேர் இழுப்போம், தீச்சட்டி எந்துவோம்” என்றார்.

குடிபெயர்ந்த தமிழர்கள்: பஞ்சாப்பில் பல தலைமுறைகளாக வசிக்கும் இந்தத் தமிழர்கள் மாரியம்மன் திருவிழாவை தமிழ்நாட்டில் நடப்பது போல் பாரம்பரியத்துக்கு சற்றும் குறைவில்லாமல் நடத்துகின்றனர். இது குறித்து பேசும் தங்கல் சாமி, “இங்குள்ள மாதா துர்க்கை அம்மன் போல்தான் மாரியம்மாவும். நாங்கள் இங்கு வந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.

திருவிழாவின் போது மாரியம்மனுக்கு அலகு குத்தி வேண்டிக் கொள்வோம்” என்றார். மக்கள் தங்கள் கோரிக்கைகளை கடளிடம் வைக்க எப்போதும் தயங்குவதில்லை. அதை பஞ்சாப் மாரியம்மன் கோயில் திருவிழாவிலும் நாம் காண்கிறோம். எனினும் இந்தத் திருவிழாவில் நம்மூர் திருவிழா போல் குளிர் சர்பத் கொடுப்பது, பிரசாதம் வழங்குவது என அத்தனையும் உள்ளது உள்ளபடியே தொடர்கிறது.

கூடுதல் சிறப்பு: அமெரிக்காவில் விநாயகர் கோயில், மலேசியாவில் முருகன் கோயில், கம்போடியாவில் சோழர் கால கோயில் என நாம் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் மாரியம்மனும் இணைந்துள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாவில், தவில், கரகம், ஒயிலாட்டம் என அனல் பறப்பது கூடுதல் சிறப்பு.

பஞ்சாப்பில் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளதுபோல், இமாச்சலப் பிரதேசத்தில் முருகனுக்கு குகைக் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இதை சிலர் கார்த்திக்கேயினி திருக்கோயில் என்றும் சிவப்பெருமானுக்கு பிறந்த பெண் தெய்வம் (மகள்) எனவும் வழிபடுகின்றனர். பொதுவாக வட இந்தியாவில் முருகப்பெருமானுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் கோயில் இல்லை என்பார்கள். அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குகைக் கோயில் தனிச்சிறப்பு பெற்றது ஆகும்.

இதையும் படிங்க: புகழ்பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

ABOUT THE AUTHOR

...view details