தமிழ்நாடு

tamil nadu

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 12 மணிநேரமாக விசாரணை...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 8:14 PM IST

Drug Smuggling Case: விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அயப்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 மணிநேரமாக நடைபெறும் விசாரணை
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்

சென்னை:மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் மன்னனும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூலையாகச் செயல்பட்டு வந்த தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவரைக் கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மேலும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்துள்ளனர்.

இன்று காலை 5:30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கை, அதிகாரிகள் அயப்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது அவரின் உறவினர்களையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் முதியவர் ஒருவரை வரவழைத்த அதிகாரிகள், அவரை வீல் சேர் மூலம் விசாரணைக்கு மேலே அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. காலை முதல் 12 மணிநேரமாக ஜாபர் சாதிக்கிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், தற்போது அவரது உறவினர்களை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவரை அந்தந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "கூட்டணி அமைக்க முடியாதவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது" - திருமாவளவன்!

ABOUT THE AUTHOR

...view details