தமிழ்நாடு

tamil nadu

இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம்; கடல் விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 6:01 PM IST

TN Budget 2024: 2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) சட்டசபையில் தாக்கல் செய்த நிலையில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூபாய் 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், திமுக அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான பல முக்கிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

இந்த 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் விளையாட்டு தொடர்பாக என்னென்ன இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்(Olympic Academy)

விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் இளைஞர்களை ஒலிம்பிக்கிற்கு தயார்ப்படுத்தும் விதமாகச் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பயிற்சி மையங்கள் இறகுப்பந்து (Badminton), கைப்பந்து (Hand Ball), கூடைப்பந்து (Basketball), தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமாக்கப் பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் பயனுள்ளதாக மெருகேற்றி, சாதனையாளர்களாக உருவாக்கிட முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, பாட்டு, இசை, நாடகம் என பன்முகப் போட்டிகள் நடத்தப்படும் எனவும் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து என 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய விளையாட்டு தொகுப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி (Tamil Nadu Olympic Water Sports Academy)

இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும் எனவும், இந்த அகாடமி இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசையில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்ப்பதுடன், அவர்களின் நீர் விளையாட்டு திறன் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பாரா தடகள மையங்கள்

மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் (Para Athletes) திறமைகளை மேம்படுத்திட, நாட்டிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான 6 விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறனை வளர்க்கும் நோக்கோடு அவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற சிறப்பு ஆடுகளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2024: மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details