புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில், 87 லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை, அமைச்சர்கள் கே என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,"தமிழ்நாடு முதலமைச்சரின் 33 மாத கால ஆட்சியில் 10 நகராட்சிகளை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளில் தலா 11 கோடி ரூபாய் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டைக்குக் குடிநீர் வழங்க 1,480 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கேஎன்.நேரு கூறுகையில்,"சென்னையைப் பொறுத்தவரைக் குடிதண்ணீருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கடந்த ஆண்டு இதே நேரம் 10 டிஎம்சி தண்ணீர் இருந்தது. இந்தாண்டு தற்பொழுது 8.5 டிஎம்சி தண்ணீர் உள்ளது. முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது,பென்னாகரத்தில் 2000 முதல் 3000 கன அடி மழை பெய்து வந்து கொண்டு இருக்கிறது.