தமிழ்நாடு

tamil nadu

"ஆளுநரின் கருத்துகளை தவறாக புரிந்து கொண்டேன்" - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 9:18 PM IST

Updated : Mar 18, 2024, 2:31 PM IST

TamilNadu Teachers Education University: மாணவர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துமாறு கல்வியியல் கல்லூரியின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Chennai
சென்னை

சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், கடந்த மார்ச் 11ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அனைத்து மாநில பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தவும், இந்த முயற்சியில் என்சிசி மற்றும் என்எஸ்எஸ் தன்னார்வலர்களை பயன்படுத்தவும், வாக்களித்தவர்களுக்கு இணையவழிச் சான்றிதழ் கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஒரு இயக்கம் போல செயல்படுத்தவும் துணை வேந்தர்களும் ஒப்புக் கொண்டனர்.

100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்திய துறைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும், அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பாராட்டப்படுவார்கள் என ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளார் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், அனைத்து கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் வாக்களர் அடையாள அட்டை எண்களைப் பெற்று அனுப்ப வேண்டும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இன்று (மார்ச் 15) கல்வியியல் கல்லூரியின் முதல்வர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மார்ச் 14ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை தவறாக வெளியிடப்பட்டது. ராஜ்பவன், ஆளுநர் செயலகத்தில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை.

மேலும் திருத்தப்பட்ட சுற்றறிக்கையில், ஆளுநர் - வேந்தர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் 11.03.2024 அன்று சென்னை ராஜ்பவனில் கூட்டத்தை நடத்தினார். அதில், பல்கலைக்கழக மாணவர்களிடையே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர்களாக பதிவு செய்யாத மாணவர்களை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அடுத்த பத்து நாட்களுக்குள் மாணவர்களை வாக்காளர்களாக பதிவு செய்து, தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்நாடு ஆளுநரால் 100 சதவீதம் வாக்களிக்கும் பல்கலைக்கழகம், கல்லூரி பாராட்டப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ஆதரவு யாருக்கு? - விக்கிரமராஜா பதில்!

Last Updated :Mar 18, 2024, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details