தமிழ்நாடு

tamil nadu

பூந்தமல்லி இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது; தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 9:45 AM IST

Chennai youth murder case: பூந்தமல்லி அருகே இளைஞரை கடத்தி கொலை செய்த வழக்கில் மூன்று பேரை நசரத்பேட்டை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Chennai Poonamallee youth murder case
பூந்தமல்லி இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது

சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் என்ற கருக்கா ஸ்டீபன்(22). இவர் நேற்று முன்தினம், அவரது வீட்டின் அருகே காரில் வந்த மர்ம நபர்கள், ஸ்டீபனை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைக் கண்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து நசரத்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், ஸ்டீபனைக் கடத்திச் சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து, நசரத்பேட்டை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலியிடத்தில் ஸ்டீபனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய கார் நிற்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, காவல் துறையினரைக் கண்டதும் அங்கிருந்து 5 நபர்கள் தப்பியோடினர். அதில், இருவரை மட்டும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்த நிலையில் மற்றவர்கள் தப்பியோடினர்.

இதனையடுத்து, அங்கு கொலை செய்யப்பட்டு இருந்த ஸ்டீபனின் உடலை, காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, கைது செய்த இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், 'பிடிபட்ட இருவரும் மலையம்பாக்கத்தைச் சேர்ந்த ஈசாக் (19), விக்னேஷ் (20) என தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களாக முன்பாக ஸ்டீபனின் செல்போனை, மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் நண்பரான பிரவீன் பிடுங்கிக்கொண்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஸ்டீபன் நண்பர்களுக்கும் பிரவீன் நண்பர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் அடிக்கடி மாறி மாறி அடித்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, மலையம்பாக்கம் பிரவீன் நசரத்பேட்டைக்கு வந்த நிலையில், ஸ்டீபனின் நண்பர்கள் தருணேஷ்வரன், சதீஷ் மற்றும் நிதிஷ் ஆகியோர் பிரவீனைக் கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரவீன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரவீனை தாக்கிய மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், கடும் கோபத்தில் இருந்த பிரவீன் நண்பர்கள், பிரவீனை தாக்கியவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சிறையில் உள்ளதால் அதற்கு காரணமாக இருந்த ஸ்டீபனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அதன்படி, ஸ்டீபனை காரில் கடத்தி சென்று மலையம்பாக்கம் பகுதியில் வைத்து கொலை செய்துள்ளது' தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கு பயப்படுத்திய ஆயுதங்கள், கார் உள்ளிட்டவற்றை காவல்துறை பறிமுதல் செய்தது. மேலும், இக்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்றாவதாக அன்பரசன் (23) என்பவரை கைது செய்ததுடன், வழக்கு தொடர்பாக தனுஷ், காட்டுபூச்சி என்ற லோகேஷ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கொலை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்ட முயற்சி.. சினிமா பாணியில் பலே கும்பலை கைது செய்த போலீஸ்.. சென்னை பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details