தமிழ்நாடு

tamil nadu

'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் உறுதியளித்த சவுக்கு சங்கர்? - savukku shankar

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 8:56 AM IST

Updated : May 11, 2024, 9:02 AM IST

Savukku shankar: 'இனி யூடியூப்பில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிடமாட்டேன்' என சவுக்கு சங்கர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கூறியதாக அவரது வழக்கறிஞர் விஜயராகவன் கூறியுள்ளார்.

Savukku shankar photo
சவுக்கு சங்கர் புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி கோதண்டராஜ் முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் சவுக்கு சங்கரிடம் நீதிபதி வழக்கு விசாரணை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கோயம்புத்தூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு யூடியூப்பர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன், “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், சவுக்கு சங்கரை 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் யூடியூப் வாயிலாக பெண்களை கொச்சைப்படுத்தியதாக வீரலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட இரண்டு வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கைது செய்ய நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் அதன் அடிப்படையில் அவரை தாக்கியது குறித்து விசாரணை நடைபெறும் எனவும், பத்து நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். தாக்கப்பட்டது குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வதாகவும் தைரியமாக இருக்கும்படி சவுக்கு சங்கரிடம் நீதிபதி தெரிவித்ததாகவும் கூறினார்.

இனி யுடியூப்பில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கமாட்டேன் எனவும், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிடமாட்டேன் எனவும் நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான தேதி இன்னும் குறிப்பிடாமல் உள்ளது.

ஏற்கனவே அவரை கோயம்புத்தூர் சிறையில் கொடூரமாக தாக்கியுள்ள நிலையில் மீண்டும் அவரை அங்கேயே கொண்டு செல்கின்றனர்” என கூறியுள்ளார். சவுக்கு சங்கரை நீதிமன்றம் அழைத்து வந்து சென்ற போது அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ விவகாரம்; விசாரணையை அடுத்த மாதம் தள்ளிவைத்த சென்னை நீதிமன்றம்! - Govindaraja Perumal Temple

Last Updated : May 11, 2024, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details