ETV Bharat / state

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ விவகாரம்; விசாரணையை அடுத்த மாதம் தள்ளிவைத்த சென்னை நீதிமன்றம்! - Govindaraja Perumal Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 9:30 PM IST

Govindaraja Perumal Temple: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்குப் பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்த விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரம்மோற்சவம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்த ராதாகிருஷ்ணன் தரப்பில், "பத்தாம் நூற்றாண்டு கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு கடைசியாக 1849ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின், சைவ - வைணவ பிரிவினர் மோதல் காரணமாகவும், தீட்சிதர்களின் எதிர்ப்பு காரணமாகவும் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை.

மேலும், கடந்த 1920ஆம் ஆண்டு நுழைவாயில்களைத் திறப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிரம்மோற்சவம் குறித்து குறிப்பிடாததால் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த முடியாது. பிரம்மோற்சவம் நடத்துவது மரபு விழாவா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், இதுவரை இல்லாத புதிய நடைமுறையைக் கொண்டு வர அரசுக்கு அதிகாரமில்லை" எனவும் வாதிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், 400 ஆண்டுகளாக நடைபெறாத பிரம்மோற்சவம் இப்போது நடத்தப்பட வேண்டும். உரிமையியல் நீதிமன்றம் பிரம்மோற்சவம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை எனக் கூறி, பிரம்மோற்சவம் நடத்த அனுமதியளித்து, அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்தக் கோரியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தீட்சிதர்கள் தரப்பில், மரபு விழாக்களாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால் நடராஜர் கோயிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்குப் பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மரபு, சட்ட விதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதன் மூலம், இந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிரம்மோற்சவ விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரியவருகிறது.

இதையும் படிங்க: “அரசு கட்டிடம் என்றால் அனுமதி வாங்கக்கூடாதா?” வள்ளலார் சத்திய ஞான சபை விவகாரத்தில் நீதிமன்றம் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.