சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (27). கட்டட தொழிலாளியான இவர், கௌரி சங்கரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்ப கஷ்டம் காரணமாக, வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.35 ஆயிரம் பணம் கடனாகப் பெற்று உள்ளார்.
இதனை வாரம் ரூ.770 வீதம், 52 வாரத் தவணைகளாக பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வகையில், கடன் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. இன்னும் 10 வாரத் தவணை பாக்கி உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று (ஏப்.30) சுபா என்கிற தனியார் வங்கி பெண் ஊழியர், பிரசாந்த்தினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தவணை வசூல் செய்ய நேரில் சென்ற தனியார் வங்கி பெண் ஊழியர் சுபா, பிரசாந்த் வீட்டில் மதியம் முதல் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரசாந்த் வீட்டிற்கு வராததால், வீட்டிலிருந்த கௌரி சங்கரியைத் தன்னுடன் வருமாறும், தவணைத் தொகையைச் செலுத்தி விட்டு உனது கணவர் உன்னை அழைத்துச் செல்லட்டும் என்று கூறி, கௌரி சங்கரியை தனியார் வங்கி அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இதுகுறித்து கௌரி சங்கரி செல்போன் மூலம் கணவரைத் தொடர்பு கொண்டு, தவணைத் தொகையைக் கட்டிவிட்டு சீக்கிரம் என்னை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்திடம் புகார் அளித்துள்ளார்.