தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் பெண் எரித்து கொலை; இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த சோகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 11:56 AM IST

Updated : Feb 3, 2024, 7:54 PM IST

Woman was burnt to death: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையாள பட்டி கருமந்தன் காடு பகுதியில் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேக்கல்பட்டி கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கருகிக் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து யார் இந்த பெண் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் எரிந்து கிடந்த பெண், 29 வயதுமிக்கவர் என்பதும், இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

சுகுணாவிற்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் ரகசியமாகச் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் சுகுணாவின் கணவருக்குத் தெரிய வரவே, அவர் சுகுணாவை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், காதலனை மறக்க முடியாத சுகுணா, கணவரை விட்டுப் பிரிந்து வல்லரசுடன் குடும்பம் நடத்த முடிவு செய்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்தன் காடு பகுதியில், வல்லரசு நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், அங்கு வீடு அமைத்து தங்கி இருந்துள்ளார். கணவனை விட்டு பிரிந்த சுகுணாவையும் அங்கே அழைத்து வந்து, இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு சுகுணா எரித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வல்லரசு தலைமறைவு ஆகிவிட்டார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, வல்லரசு சுகுணாவை எரித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிப்பதால், தலைமறைவாகியுள்ள வல்லரசுவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மகிழ்ச்சியாக வாழ்ந்த இருவருக்கும் இடையே எதனால் தகராறு ஏற்பட்டது, கொலைக்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு வல்லரசு கைது செய்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தெரியும் என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். வாழப்பாடி அருகே பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:திருப்பத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரின் முகத்தில் கத்தியால் தாக்கிய பெண்ணின் தாய்மாமன்!

Last Updated : Feb 3, 2024, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details