தமிழ்நாடு

tamil nadu

மதுரை-சோழவந்தான் ரயில்வே மேம்பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 9:21 AM IST

Updated : Feb 26, 2024, 9:52 AM IST

PM Modi: பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக மதுரை சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை இன்று திறந்து வைக்க உள்ள பிரதமர் மோடி, திருமங்கலம் அருகே அமைய உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

PM Modi lays foundation stone for new projects in Southern Railway
தெற்கு ரயில்வேயில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

மதுரை:சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும் சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே மேம்பாலத்தை இன்று (பிப்.26) பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அதேபோல, திருமங்கலம் அருகே ஒரு ரயில் மேம்பாலம் அமைக்கப்பதற்கான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், இந்திய ரயில்வேயில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய திட்டத்தை (Amrit Bharat Railway Station Project) மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவில் இந்த திட்டத்தில் முதலில் 1,275 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, 26,550 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தவும், 1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டவும் அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் 44 ரயில் நிலையங்கள், 193 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் தெற்கு ரயில்வேயில் அமைகிறது.

மேலும், இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலுள்ள 32 ரயில் நிலையங்களை ரூ.803.78 கோடி செலவில் தரம் உயர்த்த அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும், ரூ.476.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சாலை மேம்பாலங்கள் மற்றும் 106 சுரங்கப்பாதைகள் வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட இருக்கிறது.

மேலும், ரூ.1295.16 கோடி செலவில் கூடுதலாக 30 சாலை மேம்பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. இந்த 140 பாலங்களும் சாலை ரயில் சந்திப்பு லெவல் கிராசிங்குகளுக்கு மாற்றாக அமைகிறது. இதன் மூலம் சாலைகளை பயன்படுத்துவோர் பாதுகாப்பாகவும், ரயில் கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்காமலும் பயணிக்க முடியும்.

அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மௌண்ட், ஈரோடு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், பொம்மிடி, திருப்பத்தூர், சின்னசேலம், நாமக்கல், கோயம்புத்தூர் வடக்கு, திருவண்ணாமலை, திருவாரூர், விருத்தாசலம், கும்பகோணம், பழனி (13.88 கோடி), திருச்செந்தூர் (ரூ.17.50 கோடி), அம்பாசமுத்திரம் (ரூ.10.81 கோடி), காரைக்குடி (ரூ.13.91 கோடி), கோவில்பட்டி (ரூ.12.72 கோடி), மணப்பாறை (ரூ.10.11 கோடி), புதுக்கோட்டை (ரூ.14.48 கோடி), ராமநாதபுரம் (ரூ.11.95 கோடி), ராஜபாளையம் (ரூ.11.70 கோடி), பரமக்குடி (ரூ.10.56 கோடி), திண்டுக்கல் (ரூ.22.85 கோடி), தூத்துக்குடி (ரூ.12.37), திருநெல்வேலி (ரூ.270 கோடி), பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தரம் உயர்த்துவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

அம்ரித் பாரத் ரயில் நிலையங்களின் சிறப்பம்சங்கள்:

  1. நீண்ட கால தேவைகளைக் கருத்தில் கொண்டு தேவையான பயணிகள் வசதிகளுடன் ரயில் நிலையங்களை தரம் உயர்த்துதல்
  2. உள்ளூர் கலை மற்றும் பண்பாட்டில் கவனம் செலுத்தி பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவங்களை வழங்குதல்
  3. "ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு" திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருட்களை பிரபலப்படுத்த விற்பனை நிலையங்கள் அமைத்தல்
  4. தொடர்ந்து அதிகரிக்கும் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கட்டமைப்பு பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செயல்படுத்த சிறப்பு ஏற்பாடுகளை உருவாக்குதல்
  5. அழகியல் சார்ந்த நுழைவாயில்கள் மற்றும் குறைந்த செலவில் நிறைவான ரயில் நிலைய முகப்புகள் அமைத்தல்
  6. ரயில் நிலைய அணுகு சாலைகள் விரிவாக்கம், பயன்பாட்டில் இல்லாத கட்டமைப்புகளை நீக்குதல், குடிநீர், ஓய்வு அறை போன்ற பயணிகள் வசதிகளை சென்றடைய குறியீட்டு படங்களுடன் கூடிய தகவல் பலகை, பாதசாரிகளுக்கான தனிப்பாதைகள், உரிய இடங்களில் வாகன காப்பகங்கள், மேம்படுத்தப்பட்ட ஒளி விளக்குகள் ஆகியவை அமைத்தல்
  7. தேவைக்கேற்ப வெளிச்சுற்றுவளாக பகுதியுடன் கூடிய இரண்டாவது நுழைவாயில் அமைத்தல்
  8. போதுமான அளவு மேற்கூரைகளுடன் கூடிய உயர்ந்த நடைமேடைகள் அமைத்தல்
  9. தரம் வாய்ந்த பொது அறிவிப்பு ஒலிபரப்பும் வசதிகள், ஒளிரும் விளக்குகளுடன் ரயில் நிலைய பெயர் பலகை, மேம்படுத்தப்பட்ட காத்திருக்கும் அறைகள், பயணிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான குறியீட்டு தகவல் பலகைகள் அமைத்தல்
  10. வெளி வளாகப்பகுதியில் புல்வெளி மற்றும் பசுமை நிலப்பரப்பு அமைத்தல் ஆகியவை அம்ரித் ரயில் நிலையங்களின் சிறப்பம்சங்களாகும்.

இதையும் படிங்க:தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..

Last Updated :Feb 26, 2024, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details