தமிழ்நாடு

tamil nadu

“மோடியின் திட்டங்களால் மகளிருக்கு மேம்பாடு”.. பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய ஆளுநர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 2:47 PM IST

R.N.Ravi: மகளிர் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே தேசத்தின் கொள்கையையே பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஆளுநர் ஆர் என் ரவி
சட்டங்கள் உருவாக்குவதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள ஔவையார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, “அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக, மகளிருக்கான மேம்பாட்டு திட்டங்கள், பெண்களை முன்னிறுத்தும் வளர்ச்சிகள், பெண்கள் நிர்வாகம் ஆகியவற்றில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், பல்வேறு பொது இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் பெண்களுக்காக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில், 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் பெண்களும் அதிகளவில் உள்ளனர். முத்ரா கடன் (mudra loan) மூலமாக 40 கோடி பெண்கள் தொழில் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ.23 லட்சம் கோடி கடனாக பெற்றுள்ளனர். பெண்கள் அவர்கள் வாழ்நாளில், ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகின்றனர்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த தேசிய கனவு பெண்களின் சரிபாதி பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து புதுவையில் எதிர்க்கட்சிகள் பந்த்.. சுற்றுலா பயணிகள் கடும் அவதி!

ABOUT THE AUTHOR

...view details