தமிழ்நாடு

tamil nadu

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. கோவில்பட்டியில் பரபரப்பு! - PETROL BOMB IN Kovilpatti

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 3:30 PM IST

Petrol bomb in advocate house: ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக்கேட்ட வழக்கறிஞரின் வீட்டில் கூலிப்படை கும்பல் 4 கார்கள், இரண்டு பைக்குகளில் வந்து, பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடிய சம்பவத்தில் போலீசார் தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் கூலிப்படை பெட்ரோல் குண்டுவீச்சு
ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் கூலிப்படை பெட்ரோல் குண்டுவீச்சு

ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் கூலிப்படை பெட்ரோல் குண்டுவீச்சு

தூத்துக்குடி: கோவில்பட்டி ராஜூ நகர் 3வது தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன் மாரிசெல்வம். இவர் கோவில்பட்டியில் வழக்கறிஞராக உள்ளார். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர், சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் நகரைச் சேர்ந்த லட்சுமணன் என்ற சிறுவனை, வீடுகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கித் தருவதற்கு கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு லட்சுமணன் மறுக்கவே, அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிசெல்வம், பாம்பு கார்த்தியை தொடர்பு கொண்டு, எதற்காக சிறுவன் லட்சுமணனை அடித்தாய் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில், பாம்பு கார்த்திக், மாரி செல்வத்தை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அதிகாலையில் பாம்பு கார்த்திக் தலைமையில் 4 கார்கள், இரண்டு பைக்குகளில் வந்த 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், வழக்கறிஞர் மாரி செல்வத்தின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கதவைத் திறந்து வழக்கறிஞர்கள் மாரிசெல்வம் வெளியே வந்த போது, அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசி விட்டு தப்பி ஓடி உள்ளது. பெட்ரோல் குண்டுகள் மாரிசெல்வம் வீட்டின் முன் பகுதி ஜன்னல் வழியாக வீட்டுக்குள் விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்துவதற்காக சிறுவனை கட்டாயப்படுத்திய நபரை தட்டிக் கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டின் மீது, கூலிப்படை கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..ஒருவர் கைது! - Q Division Police

ABOUT THE AUTHOR

...view details