தமிழ்நாடு

tamil nadu

சனாதனம் விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்கில் நாளை தீர்ப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 10:39 PM IST

Madras High Court: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ-வாரண்டோ வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Madras High Court
சனாதனம் குறித்துப் பேசிய அமைச்சர்கள் மீதான கோ-வாரண்டோ வழக்கிற்கு நாளை தீர்ப்பு

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.

இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசி வருவதால், எந்த தகுதியின் அடிப்படையில் இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ– வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மனோகர் அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார் அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், “எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம், அதில் யாரும் தலையிட முடியாது. அனைத்து மக்களின் பிரதிநிதியாக உள்ள அமைச்சர்கள் ஒரு தலைபட்சமாக செயல்படக் கூடாது.

அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட போது, யாருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் செயல்பட மாட்டோம் என உறுதி அளித்தனர். பதவிப்பிரமாண உறுதியை மீறிய அமைச்சர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு சார்பில், சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவோம் என பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட சமுதாய மக்கள் நசுக்கப்படும்போது அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களின் பொறுப்பு. சனாதனம் என்ற பெயரில், ஒரு சமுதாயத்தினர் உயர்ந்தும், மற்றவர்கள் தாழ்ந்தும் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

எல்லாருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். அதைத் தெரிவிக்கவும், உரிமையைப் பெற்றுத் தரவும் அரசுக்கு உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்பு குறிப்பிட்ட மதத்தின் உரிமைகள் மட்டும் பேசவில்லை. அதனால் பாதிக்கப்படுபவர்களின் உரிமை பெறவும் கூறுகிறது. அதற்காகப் போராடவும் அனுமதி வழங்குகிறது” என்றனர்.

இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில் நாளை (மார்ச் 6) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பழனி கோயில் கிரிவலப் பாதையில் இலவச மினி பஸ், பேட்டரி கார்கள் இயக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details