தமிழ்நாடு

tamil nadu

சீமான் தாக்கல் செய்த வழக்கு; நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 8:19 PM IST

Actress Vijayalakshmi case: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சீமான் தாக்கல் செய்த வழக்கு

சென்னை:திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி மார்ச் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை, 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கை காவல்துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு புகார்தாரரான நடிகை விஜயலட்சுமியை ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக உள்ளது - செல்வப்பெருந்தகை பேச்சு..

ABOUT THE AUTHOR

...view details