தமிழ்நாடு

tamil nadu

போலி குழந்தை கடத்தல் வீடியோ வெளியிடுவோருக்கு சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 1:48 PM IST

Child kidnap fake videos: சமூக வலைத்தளங்களில் குழந்தைகளைக் கடத்துவது போன்ற போலி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

குழந்தைகளை கடத்துவது போல் போலி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை
குழந்தைகளை கடத்துவது போல் போலி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை

சென்னை: வடசென்னை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடமாநில நபர்கள் குழந்தைகளைக் கடத்துவது போன்றும், ஒரு குழந்தையை கடத்திச் சென்று விட்டதாகவும் சில வீடியோக்கள், ஆடியோக்கள் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தன.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குழந்தைகள் கடத்துவது போன்று பரப்பப்பட்ட வீடியோ போலியானது என தெரிய வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக போலியான வீடியோக்கள், ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையில், “சமீப காலமாக சில நபர்கள் குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற காணொலிகள் மூலம் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை.

பொதுமக்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால், சென்னை பெருநகர காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுடைய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் குற்றம் புரிந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் குழந்தைகளைக் கடத்துவது போன்று போலியான வீடியோக்களை சில நபர்கள் பரப்பி வந்த நிலையில், இத்தகைய நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!

ABOUT THE AUTHOR

...view details