மதுரை:நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ஈரோடு- நெல்லை விரைவு ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஈரோடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி ஜனவரி 24 அன்று ஈரோட்டில் இருந்து புறப்படும் திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும். இந்த முதல் சேவையை ஈரோடு ரயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் கொடி அசைத்துத் துவக்கி வைக்கவுள்ளார்.
இதனையடுத்து ஜனவரி 25 முதல் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டையில் இருந்து நீட்டிப்பு ரயில் சேவையாக இயக்கப்படும். இந்த புதிய நீட்டிப்பு சேவைக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.