தமிழ்நாடு

tamil nadu

"இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எனக்கு அமைச்சர் பதவியா?" - துரை வைகோ அளித்த பதில்! - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 3:44 PM IST

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை எனவும், இந்தத் தேர்தல் பாஜகவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியாக அமையும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டினார்.

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று(ஏப்.20) காலை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்தைப் பெற்றேன். மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற அடிப்படையிலே இந்தத் தேர்தல் பிரச்சாரம் அமைந்தது.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர். தேர்தல் பணியில் ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு வரும் நாள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளுக்கானப் பரிசாக தேர்தல் முடிவுகள் இருக்கும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உள்ளது. எல்லா வீடுகளிலும் தீப்பெட்டி இருப்பதால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நகர, கிராமப் பகுதிகளில் பெருமளவிலான வரவேற்பு எனக்கு இருந்தது.

விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்களினால், மோடி அரசு மீதான மக்கள் எதிர்ப்பு மனநிலை, எங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. எந்தக் குறையும் சொல்லாத அளவிற்கு மதிமுக தொண்டர்களைப் போல் திமுகவினர் களத்தில் பணியாற்றினர்.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தேர்தல் அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்தேன். அனைவரின் வற்புறுத்தலின் பெயரிலே திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டேன். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மத்தியில் எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பில்லை.

அது பற்றிய திட்டமும் எனக்கில்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என பிரச்சாரத்தின் போது மட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருகிறோம். இது மதிமுகவின் தனிப்பட்ட விருப்பம். பாஜக எதிர்பார்த்த அளவு இந்தத் தேர்தலில் செயல்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இந்தத் தேர்தல் மிகப்பெரிய வீழ்ச்சியாக அமையும்.

இதையும் படிங்க:தேர்தல் பணி முடிந்து திரும்பிய போது சோகம்! போலீசார் பயணித்த பேருந்து விபத்து! 21 பேர் காயம்! - MP Police Bus Accident

ABOUT THE AUTHOR

...view details