தமிழ்நாடு

tamil nadu

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்! உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ்! கந்துவட்டி கொடுமையா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 7:05 PM IST

Updated : Jan 25, 2024, 7:13 PM IST

death-certificate-for-old-woman-who-is-alive-near-arakkonam
.உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ்

Death certificate: அரக்கோணம் அருகே கடனை திருப்பி செலுத்தக் காலதாமதம் ஆனதால் உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் ஒருவர் வாங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வடமாம்பாக்கம், நாகாலம்மன் நகரைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 67). இவரின் கணவர் செங்கல்வராயன், ரயில்வே ஊழியரான இவர் கடந்த 2003ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இதனையடுத்து, தன்னுடைய கணவரின் ஓய்வூதியத்தின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார் சகுந்தலா.

இந்நிலையில் கடந்த ஆண்டு சகுந்தலாவின் மருமகன் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கிற்காக அரக்கோணம் சுவால்பேட்டையை சேர்ந்த ஒருவரிடம் சகுந்தலா 40 ஆயிரம் ரூபாய் பணத்தை, 5 வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய பணத்திற்கான வட்டி பணத்தை மாதந்தோறும் ஓய்வூதியம் வாங்கும் போது சகுந்தலா கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சகுந்தலா வட்டி பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடன் கொடுத்தவர், சகுந்தலா இறந்து விட்டதாக அரக்கோணம் நகராட்சியில் இருந்து இறப்பு சான்றிதழ் ஒன்றை வாங்கியதாக சொல்லப்படுகிறது. சான்றிதழ் உண்மையானதா அல்லது போலியானதா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதனை அரக்கோணம் ரயில்வே பணிமனை அலுவலகத்திற்கும், தனியார் வங்கி ஒன்றுக்கும் அவர் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சகுந்தலா மருமகள் சுமதியைத் தொடர்புகொண்டு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இதில், பதறிப் போன அவரது மருமகள், மாமியார் சகுந்தலாவை நேரில் அழைத்துச் சென்று அவர் உயிரோடு இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து சுமதி கூறியதாவது "எனது மாமியார் ஒருவரிடம் ரூபாய் 40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு உண்டான வட்டி பணத்தைத் தராத நிலையில் அடுத்த மாதம் முதல் எப்படி ஓய்வூதியம் வாங்குவீர்கள் என்று மிரட்டினார். அதற்கு ஏற்றார் போல் எனது மாமியார் இறந்து போனதாகப் போலியான இறப்பு சான்றிதழை வங்கிக்கும், ரயில்வே அலுவலகத்திற்கும் கொடுத்துள்ளார்.

அதிகாரிகள் எங்களை நேரில் அழைத்து விசாரித்ததன் பேரில் எனது மாமியார் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்றார். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். கொடுத்த கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆனதால் உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:திருப்பூரில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு.. தமிழக காவல்துறை மீது ஈபிஎஸ் விமர்சனம்!

Last Updated :Jan 25, 2024, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details