தமிழ்நாடு

tamil nadu

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 4:31 PM IST

Updated : Feb 17, 2024, 7:50 PM IST

Etv Bharat
Etv Bharat

Virudhunagar Fire Accident: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தலா 2 லட்சமும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

சென்னை:விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த வெம்பகோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக, திடீரென மருந்துகள் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. இதில் 5 அறைகள் தரைமட்டமாகின.

இந்த வெடிவிபத்தில் அங்கு பணியிலிருந்த 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, சம்பவம் அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு!

Last Updated :Feb 17, 2024, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details