தமிழ்நாடு

tamil nadu

"கச்சத்தீவை கொடுத்துவிட்டு 45 வருடங்களுக்கு மேல், திமுக நாடகம் ஆடுகிறது" - அண்ணாமலை குற்றச்சாட்டு! - annamalai katchatheevu issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 5:04 PM IST

Updated : Apr 1, 2024, 6:27 PM IST

BJP Annamalai katchatheevu issue: கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு 45 வருடங்களுக்கு மேலாக திமுக கச்சத்தீவை மீட்போம் என நாடகம் நடத்தி வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கச்சத்தீவை கொடுத்துவிட்டு 45 வருடங்களுக்கு மேல் திமுக நாடகம் ஆடுகிறது
கச்சத்தீவை கொடுத்துவிட்டு 45 வருடங்களுக்கு மேல் திமுக நாடகம் ஆடுகிறது

கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை நேற்று (மார்ச்.31) வெளியிட்டார். அதில், 1974இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்டது எனவும், இது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்.1) செய்தியாளர்களிடம் பேசுகையில், "கச்சத்தீவை தங்களுக்கு வழங்க வேண்டும் என 1948 முதல் இலங்கை அரசு இந்தியாவிற்குக் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து 1974இல் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டது.

கச்சத்தீவு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டது. கருணாநிதி அப்போது நான் பெயருக்கும், அரசியல் ஆதாயத்திற்கும், கச்சத்தீவு தொடர்பாகப் பெரிய போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி கச்சத்தீவை வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அவர் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்திருக்காது. இதனையடுத்து நாடகத்திற்காகக் கருணாநிதி கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு 21 முறை கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ், திமுக கட்சியினர் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகம் செய்துள்ளது. கச்சத்தீவைக் கொடுத்தது, அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியைச் சீனாவிற்குக் கொடுத்தது என காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது எதாவது ஒரு பகுதியைத் தாரை வார்த்து விடுவார்கள்.

2014 முன்பு வரை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காங்கிரஸ் தான் காரணம். அதே போல் கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது எல்லை பிரச்சனை ஏற்படுகிறது. தமிழக கடல் எல்லை சுருங்கியதால் ஆழ்கடலில் தமிழக மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைப்பதில்லை. கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு 45 வருடங்களுக்கு மேலாக திமுக கச்சத்தீவை மீட்போம் என நாடகம் நடத்தி வருகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது போல, மத்திய பாஜக அரசு கச்சத்தீவை மீட்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது படி, கச்சத்தீவை மீட்போம். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களைத் தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது. வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகார்ஜூன கார்கே பேசுகிறார்.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட லாபம் இல்லை பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கவில்லை. நாங்கள் கச்சத்தீவை மீட்க வேண்டும் என இரண்டு வருடமாகக் கூறி வருகிறோம்.

தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது. மக்களுக்குச் சரித்திரம் தெரிய வேண்டும். ஜூன் 6, 1974இல் காங்கிரஸ், திமுகவினர் செய்த செயல் இந்திய இறையாண்மையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. காங்கிரஸ், திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ராமநாதபுரத்தில் உள்ள ஒவ்வொரு மீனவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிஷியா உள்ளது. நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல. கடந்த 33 மாதங்களில் திமுக அரசு செய்த சாதனை என்ன என சொல்லுங்கள் பார்ப்போம். பிரதமர் மோடி 10 லட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்குத் தந்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் தந்துள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அன்று நாடாளுமன்றத்திலிருந்து திமுகவினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்? முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார். கச்சத்தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.

கச்சத்தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்துள்ளது. நாங்கள் மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறோம். இலங்கை முழுவதும் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் செய்ததென்ன? பாஜக வாக்கு சேகரிக்க வரும் போது கேளுங்கள்! - திமுக வேட்பாளர் பிரச்சாரம்.. - Dmk Candidate Campaign

Last Updated : Apr 1, 2024, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details