தமிழ்நாடு

tamil nadu

மேடவாக்கத்தில் 2 வயது பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:33 PM IST

Medavakkam child death: மேடவாக்கத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

medavakkam
மேடவாக்கத்தில் 2 வயது பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, குழந்தையைக் காணவில்லை எனத் தாயார் தேடிப் பார்த்து உள்ளார். அப்போது வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள குளத்தின் பக்கவாட்டில், குழந்தை நடந்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அமைச்சர்கள் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details