தமிழ்நாடு

tamil nadu

2024-25 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 3 லட்சத்து 298 மாணவர்கள் சேர்க்கை! - tn govt student

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:43 PM IST

TN School Education Department: 2024-25ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இதுவரையில் 3 லட்சத்து 298 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Chennai
சென்னை

சென்னை: தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 31,336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் 6,029 பள்ளிகளில் துவக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் smart classroom அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கும் திறன்மிகு வகுப்பறைகள் செயல்பாட்டில் இருக்கும். அதே போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது. 7,956 அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விபரத்தின் படி, ஒன்றாம் வகுப்பில் 2021-22ஆம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 637 பேரும், நடுநிலைப்பள்ளிகளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 621 பேரும் என 3 லட்சத்து 67 ஆயிரத்து 258 பேர் சேர்ந்தனர்.

ஆனால் 2022 -23ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 703 பேரும், நடுநிலைப் பள்ளிகளில் 94 ஆயிரத்து 924 மாணவர்கள் என 3 லட்சத்து 16 ஆயிரத்து 627 பேர் சேர்ந்தனர். 2023-24ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 579 பேரும், நடுநிலைப் பள்ளிகளில் 78 ஆயிரத்து 355 பேரும் என 2 லட்சத்து 66 ஆயிரத்து 934 பேர் சேர்ந்தனர்.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதியே துவக்கியதுடன், அரசின் நலத்திட்டங்களாகக் காலை சிற்றுண்டி, வண்ணமயமான சீருடை, காலணிகள், அரசால் வழங்கப்படும் சலுகை, உயர்கல்வி உதவித்தொகை போன்றவற்றை எடுத்துக் கூறியும், தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக திறன்மிகு வகுப்பறை (smart classroom) ஆங்கில மொழி ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளிட்டவற்றை மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மேலும் சமூக நலத்துறையால் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 3 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகளின் விபரங்களும் பெறப்பட்டு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையை 5 லட்சத்திற்கு மேல் உயர்த்தவும், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் மூலமாக மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசின் தீவிர நடவடிக்கையால் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையில் 3 லட்சத்து 298 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், அதிகபட்சமாகச் சேலம் மாவட்டத்தில் 21,233 மாணவர்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 938 மாணவர்களும், மிகக் குறைவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 2885 மாணவர்கள், நீலகிரி மாவட்டத்தில் 1602 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

2024-25ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பு கல்வியாண்டின் (2023-24) கடைசி வேலை நாளான 12ஆம் தேதிக்குள் 4 லட்சம் மாணவர்களைச் சேர்க்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் சேரும் மாணவர்கள் விபரத்தைப் பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 வயது பூர்த்தி செய்த அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.

ஒரு குழந்தையும் விடுபடக் கூடாது. 5 வயது பூர்த்தி செய்த குழந்தை ஏதேனும் விடுபட்டுள்ளதா? என தொண்டு நிறுவனங்கள் மூலமாக சர்வே இரண்டு வாரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பதை அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"பாஜகவைப் பற்றி பேச மாட்டோம், திமுக தான் குறி" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் சொல்லும் காரணம்! - South Chennai Candidate Jeyavardhan

ABOUT THE AUTHOR

...view details