சென்னை: "மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு" என்ற பாடல் வரிகள் கேட்பதற்கு வேண்டுமானால் குளுகுளுவென்று இருக்கலாம். கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் அய்யோ மாலா ஃபேன இந்த பக்கமா திருப்பு என்ற வடிவேலுவின் நகைச்சுவையே நினைவுக்கு வருகிறது.
வெளியே சென்று வீடு வந்தால் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் சுண்டி விட்டதுபோன்ற ஒரு உணர்வு உங்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். நாளுக்கு நாள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உணவில் மட்டும் அல்ல உடை அணிவதிலும் கவனம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்படிப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும்?வெயில் காலத்தில் பருத்தி ஆடை அணிவது மட்டுமே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆண்கள், பெண்கள் மட்டும் இன்றி வீட்டில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பருத்தி துணியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும் எனவும், குறிப்பாகப் பெண்கள் காட்டன் புடவைகளைத் தேர்வு செய்வது மிகச் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகள் கட்டாயமாக உள்ளே பனியன் அணிந்த பிறகே சட்டை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், உள்ளாடைகளை மிக இருக்கமாக அணியக்கூடாது எனவும், இரவு நேரங்களில் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆடைகளைத் தேர்வு செய்யும்போது கருப்பு, சிவப்பு, பச்சை என அடர் நிற ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, வெளிர் நிற ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதற்கான காரணத்தையும் விளக்கிக்கூறியுள்ளனர்.