தமிழ்நாடு

tamil nadu

திடீர் மாரடைப்புக்கு கரோனா தடுப்பூசி காரணமா? மத்திய சுகாதார அமைச்சர் கூறும் விளக்கம் என்ன? - Mansukh Mandaviya

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 5:58 PM IST

Updated : Apr 2, 2024, 3:30 PM IST

Mansukh Mandaviya: கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் மாறாக தனி நபர் வாழ்க்கை முறை, அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

டெல்லி :கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் கண்டறியப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்து இருப்பதாகவும், தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான குடிப்பழக்கம் ஒரு காரணியாக இருக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.

இந்திய சுகாதாரத்துறை வழிகாட்டி என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முழுமையான அணுகுமுறையின் காரணமாக பொது மக்கள் நியாயமான மற்றும் மலிவு விலையான மருத்துவ வசதிகளை பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் சீரான முயற்சியின் காரணமாக ஏறத்தாழ 150 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும், அதனால் அந்த நாடுகளில் இந்தியா மீது நல்லெண்ணத்தை உருவாக்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான எண்ணங்களை உருவாக்க சிலர் முயன்றதாக அமைச்சர் கூறினார்.

யாருக்காவது பக்கவாதம் அல்லது கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதற்கு கரோனா தடுப்பூசி காரணம் எனக் கருதுகின்றனர். இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய விரிவான ஆய்வில் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கரோனா தடுப்பூசி காரணமாகாது என தெரியவந்து உள்ளது என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும், வாழ்க்கை முறை, புகையிலை மற்றும் அதிகப்படியான குடிப்பழக்கம் காரணியாக இருக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சில சமயங்களில் தவறான தகவல்கள் மக்களிடையே சென்று ஒரு கருத்தாக உருவாகலாம் என்றும், ஆனால் நாம் எடுக்கும் எந்த முடிவும் தரவு அடிப்படையிலானதாகவும் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும் என்றும் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

நிபுணர்களின் ஆலோசனை மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தடுப்பூசி போடுவது தொடர்பான முடிவுகளை அரசு எடுத்ததாக மன்சுக் மாண்டவியா கூறினார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் உடனான சந்திப்பின் போது கரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசிகளை மக்களிடையே கொண்டு செலவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட தீவிரத் தன்மையை பாராட்டியதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி 2023 வரை நாடு முழுவதும் ஏறத்தாழ 220 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு? அதிபர் மாளிகையில் முன்னேற்பாடு தீவிரம்!

Last Updated :Apr 2, 2024, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details