குன்னூர்:நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர் மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் (68) மாரடைப்பு காரணமாக நேற்று(பிப்.02) காலமானார். குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
குன்னூர் அட்டடி பகுதியைச் சேர்ந்த ஷீலா கேத்தரின் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உறுப்பினராக இருந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அட்டடி பகுதி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். திமுக பொதுக் குழு உறுப்பினராக உள்ள இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திமுக சார்பில் குன்னூர் நகர் மன்ற தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.