ETV Bharat / state

தோடர் பழங்குடியின மக்களின் உப்பட்டும் திருவிழா.. பாரம்பரிய ஆடையுடன் வழிபட்ட மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:07 PM IST

Nilgiri tribals thoda festival: நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினரான தோடர் பழங்குடியின மக்கள், தங்கள் எருமைகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ பாரம்பரிய கலாச்சார உடையுடன் கடவுளை வேண்டி ஆடிப்பாடி, அவர்களின் வளர்ப்பு எருமைகளுக்கு உப்பு வழங்கும் சாஸ்திர விழா வெகு விமர்சையாக இன்று (பிப்.2) நடைபெற்றது.

Nilgiri tribals thoda festival
தோடர் பழங்குடியின மக்களின் உப்பட்டும் திருவிழா

தோடர் பழங்குடியின மக்களின் உப்பட்டும் திருவிழா

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தகர், காட்டு நாயக்கர், பனியர், இருளர் மற்றும் குறும்பர் போன்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். வனப்பகுதியில் வாழ்ந்து வரும் இந்தப் பழங்குடியினருக்கான முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

என்னதான் நவீன உலகில் வாழ்ந்தாலும், அவர்களின் பாரம்பரியங்களைத் தொடர்ந்து பின்பற்றியே வருகின்றனர். ஆடைகள் முதல் விழாக்கள் வரை, அவர்களின் பாரம்பரிய முறைகள் அனைத்தையும் இன்று வரை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள், பல்வேறு பாரம்பரிய விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அவர்களது கோயில்களுக்கு கூரை மாற்றும் பொலிவெய்த் திருவிழா, புத்தாண்டை வரவேற்கும் மொட்பர்த் திருவிழா மற்றும் திருமணத்திற்கான வில் அம்பு வழங்கும் விழா ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அதேபோல், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமும், இறைவனாக வணங்கக்கூடிய எருமைகளுக்கு உப்பு தண்ணீர் வழங்கும் விழாவையும் கொண்டாடி வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவை உப்பட்டும் விழா என்ற அழைக்கின்றனர். இந்தத் திருவிழா, உதகை அருகே உள்ள கார்டன் மந்தில் இன்று (பிப்.2) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதற்காக, அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பினர். பின், உப்பு கொட்டப்பட்டது. ஒவ்வொருவராக தங்களின் வளர்ப்பு எருமைகளையும் மற்றும் கோயில் எருமைகளையும் அழைத்துச் சென்று, அந்த உப்பு நீரைக் குடிக்க வைத்தனர். பின், பழங்குடியின மக்கள் அந்த நீரை புனித நீராக வேண்டினர்.

தொடர்ந்து, அம்மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, அப்பகுதியில் அமைந்துள்ள கோயிலைச் சுற்றி நடனமாடி வழிபட்டனர். பழங்காலத்தில் மழை அதிகமாக பெய்யும் சமயங்களில் எருமைகளுக்கு நோய் தாக்காமல், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவே எருமை மாடுகளுக்கு உப்பு வழங்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வருவதாகவும் அப்பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஓசூர்-ஓமலூர் ரயில் பாதையை மேம்படுத்த 100 கோடி ரூபாய்.. தருமபுரி எம்பி செந்தில்குமார் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.