விஜயகாந்த் மறைவு; தஞ்சையில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்..!
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jan 8, 2024, 10:20 AM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-01-2024/640-480-20455212-thumbnail-16x9-captain.jpg)
தஞ்சாவூர்: தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி கும்பகோணத்தில் அனைத்து கட்சியினர், வணிகர்கள், சமூக நலச்சங்கத்தினர், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் நேற்று (ஜன.7) அமைதி ஊர்வலம் சென்றனர். அதனைத்தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் மகாமக குளக்கரை அண்ணா சிலையிலிருந்து தொடங்கி, தலைமை அஞ்சலக சாலை, நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சிப்பிள்ளையார் கோயில், தஞ்சை முக்கிய சாலை, ராமசாமி கோயில் சன்னதி, பூக்கடைத் தெரு, டிஎஸ்ஆர் பெரிய தெரு வழியாகக் காந்தி பூங்கா முன்பு நிறைவு பெற்றது. அதன்பின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமநாதன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சோழபுரம் அறிவழகன், அமமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ரெங்கசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை, திருச்சி மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் சா.விவேகானந்தன், பாஜக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் ராஜா, ஓபிஎஸ் அணி சார்பில் தொழிலதிபர் பி.எஸ்.சேகர் என நூற்றுக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர்.