Panguni Uthiram: பழனி முருகன் கோயிலில் களைகட்டிய திருக்கல்யாண வைபவம்.. இன்று தேரோட்டம்!

By

Published : Apr 4, 2023, 7:30 AM IST

thumbnail

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அந்த புனித தீர்த்தத்தைச் செலுத்தி வழிபடுகின்றனர். 

இந்நிலையில்‌ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவாக நேற்று நடைபெற்றது. திருவாவினன்குடி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முகத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானைக்குத் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முகத்துக்குமாரசாமி‌ - வள்ளி, தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. 

அதனைத் தொடர்ந்து அருள்மிகு முகத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் ஏறி நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். 

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விடுமுறை நாள் என்பதால் பங்குனி உத்திரத்திருவிழாவிற்கு பழனியில் குவிந்த பக்தர்கள்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.