போலீசார் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு கெத்தாக போஸ் கொடுத்த திருடர்கள்; பழனியில் அதிர்ச்சி!!
திண்டுக்கல்: பழனி இட்டேரி ரோடு தெருவில் வசிப்பவர் அரசு மருத்துவர் கோகுல கண்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நாமக்கல் சென்ற போது மர்ம நபர்கள் கோகுலகண்ணனின் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த நகைகள் 40 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 6 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளை வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணிக்கராஜ், ஹரிஹரன், பரணிதரன், உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் பழனி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போது பத்திரிகையாளர்கள் படம் எடுப்பதை பார்த்த குற்றவாளிகள், கெத்தாக போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பழனியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குற்றவாளிகள் கெத்தாக கேமராவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் திருடர்களுக்கு கொஞ்சம் கூட அச்சமில்லாத நிலையில் உள்ளனர் என்பது தெரிகிறது. காவல் துறையினர் திருடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: Video - தெரு நாய்களின் பாதுகாப்பு வளையத்தில் ஹாயாக தூங்கிய போதை ஆசாமி!