100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மயங்கிய போதை ஆசாமி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை!

By

Published : May 14, 2023, 9:50 PM IST

thumbnail

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அடுத்த செமனாம்பதி பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் லட்சுமணன் (45). இவர் ஆனைமலை சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு, அந்தப் பணத்தை வைத்து மது அருந்திவிட்டு ஆங்காங்கே தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஆனைமலை அடுத்த ஜமீன்கொட்டாம்பட்டி பிரிவு அருகே மது அருந்திவிட்டு இடுப்பில் ஒரு குவார்ட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டு அருகே இருந்த 100அடி உயரமுள்ள பனை மரத்தில் மது போதையில் ஏறியுள்ளார். பனைமரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடுப்பில் இருந்த ஒரு குவார்ட்டர் பாட்டிலை மரத்தில் இருந்தபடியே அருந்தியுள்ளார்.

இதில், போதை தலைக்கு ஏறிய நிலையில் பனை மரத்தின் உச்சியிலேயே மயங்கி விட்டார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர், மது போதையில் இருந்த அவரை கயிறு கட்டி இறக்குவதற்கு முடிவு செய்தனர்.

ஆனால், அது முடியாத காரியம் எனக் கருதிய நிலையில் உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியுடன் மது பிரியர் லட்சுமணனை மூன்று மணிநேர நேரப் போராட்டத்துக்குப் பிறகு, மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவரை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.