பொங்கல் யோகா! ஏக பாத ராஜகபோடாசனத்தில் 10 நிமிடங்கள் நின்று மாணவர்கள் சாதனை!
Published : Jan 17, 2024, 11:50 AM IST
திருவள்ளூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு பிரிவு இணைந்து யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்த நிகழ்வில், வேல்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஒரே நேரத்தில், 105 மாணவர்கள், தொடர்ந்து 10 நிமிடங்கள் ஏக பாத ராஜ கபோடாசனத்தில் நின்று சாதனை படைத்தனர். இவர்களது சாதனை ‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த பயிற்சி மையத்திற்கும் மாணவ, மாணவியருக்கும் பதக்கம் மற்றும் சாதனைக்கான பட்டயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று மாணவர்களை உற்சாகப் படுத்தினர்.